கோவில்களில் அனுமதி மறுப்பது சட்டவிரோதம்: பிரதீப் ஈஸ்வர்
கோவில்களில் அனுமதி மறுப்பது சட்டவிரோதம்: பிரதீப் ஈஸ்வர்
ADDED : ஏப் 16, 2026 03:57 AM

சிக்கபல்லாபூர்: ''கோவிலுக்குள் நுழைய அனைத்து பக்தர்களுக்கும், சமமான உரிமை உள்ளது. அவர்களுக்கு அனுமதி மறுக்க கூடாது,'' என காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து, நேற்று அவர் அளித்த பேட்டி:
ஹிந்து அறநிலையத்துறை மற்றும் தனியார் கோவில்களில் தரிசனம் செய்வது, பக்தர்களின் உரிமை. கடவுளின் பார்வையில் அனைவரும் பக்தர்கள் தான். அரசியலமைப்பின்படி, ஜாதி, மதம், பாலினம் அடிப்படையில், பாரபட்சம் பார்ப்பதற்கு தடை விதித்துள்ளது.
அறநிலையத்துறை கோவில்கள் மட்டுமல்ல, தனியார் கோவில்களிலும் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பது, சட்ட விரோதமாகும். கடவுளை பொறுத்த வரை அனைவரும் சமம்தான். இது குறித்து, ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளேன்.
சில சமுதாயங்களுக்கு, கோவிலில் நுழைய அனுமதி மறுப்பதாக புகார் வந்துள்ளது. இந்த விதிமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளேன். இந்த உத்தரவை அனைத்து கோவில்களின் நிர்வாகங்களும் செயல்படுத்த வேண்டும்.
'ஜாதி, மதம் அல்லது பாலின பேதமின்றி, அனைவருக்கும் கடவுளை தரிசிக்க அனுமதி உள்ளது' என்ற அறிவிப்பு பலகையை அந்தந்த கோவில் முன்பாக வைக்க வேண்டும்.
கோவிலில் நுழைய தடை போடும் நபர் அல்லது கோவில் நிர்வாக அதிகாரி மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். சிக்கபல்லாபூர் தொகுதி முழுதும், கோவில்களில் அரசியலமைப்பு தத்துவங்களை காப்பாற்றுவது, சமத்துவத்தை ஏற்படுத்துவது எங்களின் முக்கிய குறிக்கோள்.
இவ்வாறு அவர் கூறினார்.
