PUBLISHED ON : ஏப் 19, 2026

சுயதொழில் மேலானது!
ஓய்வு பெற்ற அரசு ஊழியரான என் நண்பருக்கு, ஒரே மகன். எம்.காம்., முடித்து, தனியார் வங்கியில் பணிபுரியும் அவனுக்கு, எம்.எஸ்.சி., பட்டதாரி பெண்ணை திருமணம் செய்து வைத்தார்.
அவள், சொந்தமாக மூலிகைப் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வந்தாள். திருமணத்தின் போது, உறவினர்கள் சிலர், 'ஒரே மகனுக்கு பெரிய வேலையில் உள்ள பெண்ணைப் பார்த்திருக்கலாமே...' எனக் கேட்டனர்.
அதைப்பற்றி கவலைப்படாமல், மகனுடைய திருமணத்தை சிறப்பாகவே செய்தார், நண்பர்.
அந்த பெண், இயற்கை மூலிகைகளை பயன்படுத்தி, மருந்துப் பொருட்களையும், மூலிகை அழகு சாதனப் பொருட்களையும் தயாரித்தாள். 'இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம், தன் பொருட்களை விளம்பரப்படுத்தி, 'ஆன்லைனில்' விற்பனை செய்து, பெரும் வருவாய் ஈட்டி வருகிறாள்.
அவளது தயாரிப்புகள், உள்ளூர் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் வரவேற்பு பெற்று வருகின்றன. இப்போது, தொழில்முனைவோர் மாநாடுகளில் கூட பேச அழைக்கப்படுகிறாள்.
மாத சம்பளத்தை விட, சுயமாக தொழில் செய்து, புதிய உயரங்களை தொடுவது மேலானது என்பதை, அவள் நிரூபித்து வருகிறாள். இதனால், நண்பரின் குடும்பமும், உறவினர்களும், இப்போது அவளைப் பார்த்து, பெருமை கொள்கின்றனர்.
— செ.விஜயன், சென்னை.
சிந்தித்து செயல்பட்ட நண்பர்!
சமீபத்தில், என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்த போது, வராண்டாவில் வகை பிரித்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாடப் புத்தகங்கள் மற்றும் வழிகாட்டிப் புத்தகங்களைப் பார்த்தேன்.
அதுகுறித்து விசாரித்த போது, அவை அனைத்தும், அவரது பிள்ளைகள் அரசுத் தேர்வுகளுக்கு தயாராகும் போது வாங்கி வைத்திருந்த புத்தகங்கள் என்றார், நண்பர்.
தற்போது இருவருக்கும், அரசு வேலை கிடைத்து, வெளியூரில் வசித்து வருவதால், அப்புத்தகங்களை வீணாக்காமல், மற்றவர்களுக்கு பயன்படுமாறு, அருகிலுள்ள அரசுப் பள்ளி ஏழை மாணவர்களுக்கும், பொது நுாலகத்திற்கும் கொடையாக வழங்குவதற்காக எடுத்து போகவிருப்பதாக கூறினார்.
துாசு படிந்திருந்த அந்தப் புத்தகங்கள், பல மாணவர்களின் கையில் பயனுள்ளதாக மாறப்போவதை நினைத்த போது, எனக்கு அளவில்லா மனநிறைவு ஏற்பட்டது.
வீட்டில் இடத்தை அடைத்து கிடக்கும் பழைய புத்தகங்கள், யாரோ ஒருவரின் முன்னேற்றத்திற்கு பாலமாக மாறலாம். இதை சிந்தித்து, பள்ளிகளுக்கும், நுாலகங்களுக்கும் புத்தக தானம் செய்யலாம்.
அந்த வகையில் ஆக்கப்பூர்வமாக சிந்தித்து செயல்பட்ட, நண்பரது எண்ணத்தையும், செயலையும், மனதார பாராட்டினேன்.
— ஆர். செந்தில்குமார், மதுரை.
உலோக ஆபரணங்களை அணிபவர்களே உஷார்!
'டி வி' பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார், நண்பர். அவரது விரலில் எப்போதும் உலோக மோதிரத்தை அணிந்து இருப்பார்.
ஒருநாள், அந்த மோதிரத்துடன், வாடிக்கையாளரின், 'டிவி'யை பழுது பார்க்கும் போது, திடீரென மின்சாரம் உலோக மோதிரம் வழியாக பாய்ந்தது.
உயிருக்கு ஆபத்தான நிலைக்கு சென்று, அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்; அன்று முதல், உலோக மோதிரம் அணிவதை தவிர்த்தார்.
மின்சாரம் மற்றும் மின்னணு பொருட்கள் பழுது பார்ப்போர், மோதிரம், வளையல், கைக்கடிகாரம் மற்றும் 'பிரேஸ்லெட்' போன்ற, எளிதில் மின் கடத்தும் உலோக ஆபரணங்களை அணிவது ஆபத்தானது.
மற்றவர்களும் கூட, உலோக ஆபரணங்களோடு, மின் சாதனங்களை கையாளும் போது, மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
வாசகர்களே... ஆபரணங்கள், உயிரை விட மதிப்பு வாய்ந்தவை கிடையாது. உலோக ஆபரணங்களை அணியும் போது, எச்சரிக்கையாக இருங்கள்.
— வி.முருகன், கோவை.
