PUBLISHED ON : மே 31, 2026 12:09 AM

நடிகர் சிவகுமார் பேட்டி:
மொபைல் போன்களை ஓரமாக வைத்துவிட்டு, ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும். நெருக்கமான நண்பர்களை உடன் வைத்துக் கொள்ளுங்கள். மன அழுத்தம் வருவதற்கு முக்கிய காரணம் தனிமை தான். உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால், மருத்துவர்களே தேவை இல்லை.
வாஸ்தவம் தான்... மொபைல் போன்களில் குனிந்திருக்கும் தலைகளை நிமிர்த்தி, சுற்றியிருக்கும் உலகத்தையும் உறவுகளையும் பார்த்தாலே, மன அழுத்தத்துக்கு இடமிருக்காது
அகில இந்திய காங்., கமிட்டி உறுப்பினர் பட்டுக்கோட்டை ராஜேந்திரன் பேச்சு: காங்கிரஸ் கட்சி அழிவு பாதையை நோக்கி செல்வதை தடுக்க வேண்டும். அதற்கு, காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் ஏற்க வேண்டும். தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், தொகுதி வாங்கியதிலும், வேட்பாளர்களை தேர்வு செய்ததிலும் பணம் வாங்கி முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, சிறப்பு காரிய கமிட்டியை கூட்ட வேண்டும். அவர்களை கட்சியில் இருந்து நீக்கி, காங்கிரசை காப்பாற்ற வேண்டும்.
ஏற்கனவே, காங்., தலைவர் பதவியில் இருந்த ராகுல், தோல்விகளுக்கு பொறுப்பேற்க முடியாம தான் விலகிட்டாரு... இப்ப, துவண்டு போய் கிடக்கும் கட்சிக்கு தலைமை ஏற்க வாங்கன்னா எப்படி வருவாரு?
விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் வட தமிழக தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் பேட்டி: தமிழகத்தில் உள்ள ஹிந்து கோவில்களில், ஏழைகளும் பணக்காரர்களும் ஒரே இடத்தில் நின்று சுவாமி கும்பிட வேண்டும் என்பது எங்களின் விருப்பம். பழனி முருகன் கோவிலில், 500 அல்லது 1,000 ரூபாயை கோவில் ஊழியர்களிடம் வழங்கினால், முருகன் பாதம் அருகில் அமர வைத்து தரிசிக்க வைப்பர். சாதாரண பக்தர்கள், முருகனை 50 அடி தள்ளி நின்றுதான் பார்ப்பர். இப்படி பணம் கொடுத்து நடுவில் புகுந்து விடாமல், எல்லாரும் சமமாக நின்று சுவாமி கும்பிட வேண்டும் என்று வழக்கு தொடுத்துள்ளோம். நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறோம்.
ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்பதை நிரூபிக்க போராடும் இவருக்கு, வழக்கில் வெற்றி கிடைக்க வாழ்த்துகள்!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது, அரசியல் உள்நோக்கம் கொண்டது. அவரது வீட்டில் எந்த ஆவணங்களும் கண்டறியப்படவில்லை. முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் செயல் என்பதை இது உறுதிப்படுத்துகிறது. அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை, அரசியல் பழிவாங்கும் கருவிகளாக பயன்படுத்தக் கூடாது.
எந்த இடத்திலும், மத்திய பா.ஜ., அரசின் பெயரை குறிப்பிடாம நாசுக்கா கண்டனம் தெரிவிச்சிருக்கிறாரே!
