PUBLISHED ON : மே 30, 2026 12:52 AM

பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார் அறிக்கை:
மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள், தங்களின்
சுயநலத்திற்காகவும், தேவைக்காகவும் மக்களுக்கு சேவை செய்ய கொடுக்கப்பட்ட
பதவியை ராஜினாமா செய்து, தொகுதி மக்களை ஏமாற்றியது கண்டனத்துக்குரியது.
தேர்தல் ஆணையம் இதுபோன்ற செயல்களை ஊக்குவிக்காமல், ராஜினாமா செய்த
எம்.எல்.ஏ.,க்களை, குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் மீண்டும் போட்டியிட
அனுமதிக்காமல் தடை விதிக்க வேண்டும். 'நோட்டா' பதிவு, முதியோருக்கு
வீட்டில் இருந்தபடியே ஓட்டுப்பதிவு என, எத்தனையோ சீர்திருத்தங்களை
செய்துள்ள தேர்தல் கமிஷன், கட்சி தாவல்களை தடுக்க இதையும் பரிசீலிக்கணும்!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேட்டி: தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் கொலை, தாக்குதல், பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகள், பழிக்குப்பழியாக நடக்கும் வன்முறை சம்பவங்கள், பொதுமக்களிடையே கடும் அச்சத்தையும், பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தியுள்ளன. புதிய தமிழக அரசு தனது நிர்வாக திறனை, சட்டம் - -ஒழுங்கு பாதுகாப்பில் முழுமையாக வெளிப் படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தி.மு.க., ஆட்சி வீட்டுக்கு போக, இந்த மாதிரி வன்முறை சம்பவங்களும் ஒரு காரணம் என்பதை, தமிழக வெற்றிக் கழக அரசு கவனத்தில் எடுத்துக்கணும்!
த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பேற்ற பின், விவசாய கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என, விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். தற்போதைய விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பு, குறுகிய எண்ணிக்கையிலான விவசாயிகளுக்கு மட்டுமே பயன் தரும். பெரும் நஷ்டத்தில் இருக்கும் பல விவசாயிகளுக்கு, இந்த கடன் தள்ளுபடி அறிவிப்பால் பயன் இல்லை. தேர்தலுக்கு முன் த.வெ.க., அறிவித்த வாக்குறுதிகளை, காலம் தாழ்த்தாமல் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
புதுசா ஆட்சிக்கு வந்தவங் களுக்கு, ஆறு மாதங்கள் அவகாசம் தரலாமே!
அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, தற்போது எந்த கட்சியிலும் சேராத முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: புதிதாக ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் கட்சி மீது, ஆட்சி அமைக்கும் ஆசையில் இருந்த கட்சிகள் வைக்கும் விமர்சனங்கள், ஆத்திரத்துடன் கூடிய வன்மத்தால் வெளிப்படும் வார்த்தைகளாகவே இருக்கின்றன. பெருந்தலைவர் காமராஜர் சொன்னது போலவே, ஆட்சியாளர்களுக்கு ஆறு மாத காலம் அவகாசம் கொடுக்கலாமே.
இந்த அறிவுரை, இவரது முன்னாள் தலைவர் பழனிசாமிக்கு தான் என்பது நல்லாவே தெரியுது!
