/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
பண்பாட்டு அடையாளங்களை காப்பதில் தனி அக்கறை காட்டுகிறது 'தினமலர்'
/
பண்பாட்டு அடையாளங்களை காப்பதில் தனி அக்கறை காட்டுகிறது 'தினமலர்'
பண்பாட்டு அடையாளங்களை காப்பதில் தனி அக்கறை காட்டுகிறது 'தினமலர்'
பண்பாட்டு அடையாளங்களை காப்பதில் தனி அக்கறை காட்டுகிறது 'தினமலர்'
PUBLISHED ON : ஜன 11, 2026 12:00 AM

பத்திரிகை துறையில் தனக்கான பாணியை உருவாக்கி, 75 ஆண்டுகளாக தொடர்ந்து பயணிக்கும் 'தினமலர்' நாளிதழின் பங்களிப்பு, தமிழ் இதழியல் வரலாற்றில், தனித்துவமான முத்திரையை பதித்துள்ளது.
தேசியப் பார்வையுடனும், விடுதலை உணர்வுடனும் டி.வி.ராமசுப்பையர் துவக்கிய தினமலர் நாளிதழ், தற்போதைய ஆசிரியரான கி.ராமசுப்பு பொறுப்பில், தனக்கான நிரந்தர வாசகப்பரப்பை கொண்டுள்ளது.
அரசியல் பார்வையில் தினமலருக்கு மாறுபாடு இருந்தாலும், தமிழகத்தின் பண்பாட்டு அடையாளங்களை பாதுகாப்பதில் தனி அக்கறையுடன் செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது. குறிப்பாக, தொல்லியல் மற்றும் நாணயவியல் சார்ந்த ஆய்வுகளில் தினமலர் வெளியிட்ட கட்டுரைகளும், அதில் எடுத்துக் காட்டப்பட்ட ஆதாரங்களும், தமிழ் பண்பாட்டின் தொன்மைக்கு சான்றாக உள்ளவை.
இரும்பின் பயன்பாட்டை இந்தியாவில் முதன் முதலில் அறிந்தவர்கள் தமிழர்கள் என்பதை, தமிழக அரசு அறிவியல்பூர்வமாக நிறுவிய நிலையில், தினமலரின் நீண்ட நெடிய ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் தொல்லியல் தடயங்கள் தொடர்பான செய்திகள், தமிழக அரசுக்கு வலுவூட்டக் கூடியவையாகும்.
தமிழர்கள் இடையே, கொள்கைகளும் கருத்துக்களும் மாறுபட்டு இருந்தாலும், தமிழகத்தின் வளர்ச்சியில், எல்லோருக்குமே ஒருமித்த அக்கறை இருக்கும். அந்த வகையில், தினமலர், தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்கள் குறித்து, தொடர்ந்து தனது குரலை முன்வைக்கும் பத்திரிகையாக செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கைவிடப்பட்ட ரயில்வே திட்டங்கள், புதிதாக அமைக்க வேண்டிய ரயில்வே தடங்கள், தேவைப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், புதிய ரயில் நிலையங்கள் குறித்து, தினமலர் பல ஆண்டுகளாக செய்திகளை வெளியிட்டு வருகிறது.
நீண்டகாலம் முடங்கிக் கிடந்த, மன்னார்குடி - நீடாமங்கலம் ரயில் தடத்தை மீட்க, எனது தந்தை டி.ஆர்.பாலு எம்.பி.,யாகவும் மத்திய அமைச்சராகவும் இருந்து மேற்கொண்ட வெற்றிகரமான முயற்சிகளின்போது, அந்த ரயில் தடத்தின் முக்கியத்துவத்தை தினமலர் பதிவு செய்ததை மறக்க முடியாது. இன்று அந்த தடத்தில் பல விரைவு ரயில்கள் இயங்குவதால், மக்களின் தொலைதுார பயணம் எளிதாகி உள்ளது.
தமிழகத்தின் தொழில்துறை, கடந்த நான்கு ஆண்டுகளில், மிகப்பெரும் பாய்ச்சலுடன் முன்னேறி வருவதையும்; இந்தியாவில் உள்ள மாநிலங்களில், தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் இருப்பதற்கு, தொழில் துறை முதலீடுகள் முக்கிய காரணமாக இருப்பதையும்; வாசகர்களுக்கு விரிவாக எடுத்துக் காட்டும் தினமலர் செய்திக் கட்டுரைகள் தொடர வேண்டும்.
மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் ரசனைக்கேற்ற பல இணைப்புகளை வாரந்தோறும் வழங்கி வரும் தினமலர் நாளிதழ், தன் பணியை, காலத்திற்கேற்ற தொழில்நுட்ப மாற்றங்களுடன் தொடர்வதில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது.
இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்து துவங்கியது போல, தமிழகத்தின் தென்முனையில் துவக்கப்பட்டு, மாநிலம் முழுதும் பரவி, பவள விழா காணும் தினமலர் நாளிதழுக்கு வாழ்த்துகள்.
முனைவர் டி.ஆர்.பி.ராஜா
தமிழக அமைச்சர் - தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகம்

