மோகன்லால் நெற்றியில் வசனத்தை எழுதி ஒட்டி படித்து காட்சியை ஓகே செய்த பிரதீப் ராவத்
பாலிவுட் நடிகர் பிரதீப் சிங் ராவத் தனது 74 வது வயதில் நேற்று இரவு ரத்தப் புற்றுநோய் காரணமாக காலமானார். தமிழில் சிம்பு நடித்த தொட்டி ஜெயா படத்தில் அவர் அறிமுகமானாலும் சூர்யாவுடன் நடித்த கஜினி திரைப்படம் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் அவர் நான்கு படங்களில் நடித்துள்ளார். அதில் முதல் படமாக 2011ல் மோகன்லால், ஜெயராம் ஆகியோர் இணைந்து நடித்த சைனா டவுன் என்கிற படத்தில் வில்லனாக நடித்திருந்தார் பிரதீப் ராவத்.
அந்த படத்தில் அவர் மலையாள வசனங்களை பேசுவதற்கு ரொம்பவே சிரமப்பட்டார். பிராம்ப்டிங் மூலமாக ஓரளவு வசனங்களை சமாளித்தார். ஆனால் ஒரு குறிப்பிட்ட காட்சியில் மோகன்லாலை பார்த்து நீண்ட வசனம் ஒன்றை பேச வேண்டி இருந்தது. அதற்கு பல வழிகளை கையாண்டும் ஒர்க் அவுட் ஆகாததால், அவர் பேச வேண்டிய வசனங்களை மோகன்லாலின் நெற்றி மற்றும் கன்னங்களில் சிறு சிறு பேப்பரில் எழுதி ஒட்டிவைத்து, அதை பார்த்து வசனங்களை பேச வைத்தார்களாம்.
பிரதீப் சிங் ராவத்தின் மரணத்தைத் தொடர்ந்து, அவருடன் இந்த படத்தில் இணைந்து நடித்த நடிகர் ஜெயராம் அவர் குறித்த நினைவுகளை தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார்.