பிளாஷ்பேக்: அவசரமாக தயாராகி, அவசரமாக தியேட்டரை விட்டு பறந்த 'மாடப்புறா'
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த படங்களில் 20 சதவிகித படங்கள் தோல்வியும் அடைந்திருக்கிறது. அவரது தோல்வி படங்களில் முக்கியமானது 'மாடப்புறா'. சரித்திர படங்களில் நடித்து வந்த எம்ஜிஆர், திருடாதே, தாய் சொல்லை தட்டாதே போன்ற சமூக படங்களில் நடித்து அவையும் வெற்றி பெற்றதால், அவசர அவரசமாக தயாரான படம் 'மாடப்புறா'. ஏவி.மெய்யப்பச் செட்டியாரின் மைத்துனர் பி.வள்ளிநாயகம், பிவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்த படம் இது.
இதில் சரோஜா தேவி, எம்.ஆர். ராதா, எம்.என்.நம்பியார், கே.வசந்தி, ஜெமினி சந்திரா, 'குலதெய்வம்' ராஜகோபால், எம்.கே.முஸ்தபா, டி.கே.பாலச்சந்திரன், என்.எஸ். நாராயண பிள்ளை, சீதாலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்தப் படத்தில் முதலில் நாயகியாக நடிக்க இருந்தவர் சவுகார் ஜானகி, சில காரணங்களால் அவர் விலகினார். பின்னர் சரோஜா தேவி நடித்தார்.
படத்தின் கதை, வசனத்தை நாடக ஆசிரியரான 'திலகம்' நாராயணசாமி எழுதினார். நாயகன் எம்.ஜி.ஆரை நாயகி சரோஜாதேவி, மற்றொரு நாயகி வசந்தி இருவரும் காதலிக்கிறார்கள். எம்.ஜி.ஆரின் தம்பி டி.கே.பாலச்சந்திரன், வழக்கறிஞரைக் கொன்றதாக கைது செய்யப்படுகிறார். அந்த பழியை ஏற்றுக் கொள்ளும் எம்.ஜி.ஆர், போலீஸிடம் தப்பி உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிப்பதும், தன்னை காதலிக்கும் இருவரில் யாரை திருமணம் செய்கிறார் என்பதும்தான் கதை.
எஸ்.ஏ.சுப்பராமன் படத்தை இயக்கினார். கே.வி.மகாதேவன் இசை அமைத்த இந்தப் இந்தப் படத்துக்கு 'வயலின்' மகாதேவன் பின்னணி இசை அமைத்தார். படத்தில் சோக காட்சிகள் அதிகமாக இருந்ததாலும், எம்ஜிஆர் தன் காதலியை விட்டுவிட்டு விருப்பமே இல்லாமல் வேறொரு பெண்ணை மணந்ததாலும் அதை ரசிகர்கள் ஏற்காததால் படம் தோல்வி அடைந்ததாக கூறுவார்கள். என்றாலும் படத்தின் பாடல்கள் ஹிட்டானது.