அனுஷ்கா பட இயக்குனர் மீது 3.5 கோடி மோசடி வழக்கு
அனுஷ்கா நடிப்பில் கடந்த 2016ல் தெலுங்கில் வெளியான படம் 'பாகமதி'. இந்தப் படத்தை இயக்குனர் ஜி. அசோக் (குட்லூரி அசோக் பாபு) என்பவர் இயக்கியிருந்தார். அதற்கு முன்னதாக அவர் நானி நடித்த 'பிள்ள ஜமீன்தார்' என்கிற படத்தையும் இயக்கியுள்ளார். இந்த நிலையில், புதிய படம் ஒன்றில் தனது மகனை கதாநாயகனாக அறிமுகப்படுத்துவதாகக் கூறி தன்னிடம் இருந்து 3.5 கோடி பணத்தை மோசடி செய்ததாக அவர் மீது தற்போது ஹைதராபாத் பொருளாதார குற்றப்பிரிவில் அனுமந்தராவ் என்கிற நபர் புகார் அளித்துள்ளார்.
அதில், கடந்த 2024 முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை பல்வேறு தவணைகளாக ரூ.3.5 கோடியைப் பெற்றுக்கொண்ட அசோக், வாக்குறுதி அளித்தபடி எந்தப் படமும் எடுக்கவில்லை. அதேசமயம் பணத்தைத் திருப்பி கேட்டதற்கும் அவர் திருப்பித் தர முன்வரவில்லை என்று அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகாரைத் தொடர்ந்து இயக்குனர் அசோக் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.