திரில்லர் ஜானரில் இருந்து குடும்ப கதைக்குத் தாவும் ஜீத்து ஜோசப்
மலையாள திரையுலகில் 'திரிஷ்யம்' படத்தை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனர் வரிசைக்கு உயர்ந்தவர் இயக்குனர் ஜீத்து ஜோசப். தென்னிந்திய அளவில் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் படங்களை இயக்கி வருகிறார். இவரது படங்கள் திரில்லர் வகையைச் சேர்ந்ததாக, பெரும்பாலும் சீரியஸான படங்களாகவே தான் இருந்து வருகின்றன. கடந்த வருடம் கூட 'நுனக்குழி' என்கிற படத்தின் மூலம் நகைச்சுவை ஏரியாவில் கால் பதிக்க முயன்றார் ஜீத்து ஜோசப். இந்த நிலையில், தற்போது இந்த திரில்லர் படங்களிலிருந்து விலகி முதன்முறையாக குடும்பக்கதை அம்சம் கொண்ட படம் ஒன்றை இயக்கப்போவதாகக் கூறியுள்ளார் ஜீத்து ஜோசப்.
இந்த படத்தில் கதாநாயகனாக பிரித்விராஜ் நடிக்க இருக்கிறார். இது 'திரிஷ்யம்' படம் உருவாவதற்கு முன்பே, அதாவது அவர் பிரித்விராஜை வைத்து 'மெமரீஸ்' என்கிற படத்தை இயக்கிய சமயத்திலேயே அவரது மனதில் உருவான கதை. இந்த கதையின் அவுட்லைனை கேட்டதும் “இதில் நானே நடிக்கிறேன்” என அப்போதே பிரித்விராஜ் ஜீத்து ஜோசப்புக்கு வாக்கும் கொடுத்திருந்தாராம். ஆனால் 'திரிஷ்யம்' படம் மூலம் தான் பிஸியாகி விட்டதாலும், அடுத்தடுத்து திரில்லர் ஜானர் படங்களாக இயக்கியதாலும் இந்த குடும்பக்கதை அம்சம் கொண்ட படத்திற்கு நேரம் ஒதுக்க முடியாமல் இருந்தது என்றும், தற்போது அடுத்ததாக அந்த கதையில்தான் நான் பணியாற்றி வருகிறேன் என்றும், வெறும் திரில்லர் பட இயக்குனர் என்று மட்டுமே நான் அறியப்பட விரும்பவில்லை” என்றும் கூறியுள்ளார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.