உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அமைச்சர் ராஜ்மோகனுக்கு ஏன் அந்த இலாகா? நடிகர் விஷால் கேள்வி

அமைச்சர் ராஜ்மோகனுக்கு ஏன் அந்த இலாகா? நடிகர் விஷால் கேள்வி


நடிகர் விஜய், தமிழக முதல்வராக பொறுப்பேற்றதற்கு நடிகர் விஷால் ஏற்கனவே நன்றி தெரிவித்திருந்தார். அப்போது, பாதுகாப்புக்கு இருக்கும் பெண் போலீசாருக்கு நடமாடும் கழிப்பறை வசதி, மோசமான சாலை வசதிகளை மேம்படுத்துதல் போன்ற கோரிக்கைகளையும் விஜயிடம் முன்வைத்தார் விஷால். இந்த நிலையில், விஜய் அமைச்சரவையில் இடம்பெற்றவர்களுக்கு நேற்று இலாகா ஒதுக்கப்பட்டது. அதில், அமைச்சர் ராஜ்மோகனுக்கு திரைப்படத் தொழில்நுட்பத்துறை ஒதுக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஷால் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: முதல்வர் விஜய், அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்கியது மகிழ்ச்சி. அதே வேளையில், அமைச்சர் ராஜ்மோகனுக்கு 'திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் சினிமாட்டோகிராப் சட்டம்' துறை ஒதுக்கப்பட்டிருப்பது சற்று மனவேதனை அளிக்கிறது.

​கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அடிமட்டத்திலிருந்து இந்தத் திரையுலகின் ஒரு அங்கமாக இருந்து வரும் நம் முதல்வரை விட, இந்தத் துறையில் தற்போதைய சூழல் என்ன என்பது குறித்துக் குறைந்த அனுபவமோ அல்லது அனுபவமே இல்லாத ஒருவரிடம், நாம் ஒரு அமைப்பாகவோ அல்லது சங்கமாகவோ எவ்வாறு நம் கோரிக்கைகளையும் குறைகளையும் கொண்டு சேர்க்க முடியும்?

தற்போது நம் திரையுலகம் கடுமையான நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது; பல சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது. இந்தச் சூழலில், திரையுலகினருக்கு குறிப்பாகத் தயாரிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு யார் ஒரு நம்பிக்கைக் கீற்றாக இருக்க முடியும்?

​அன்புள்ள முதல்வரே, தயவுசெய்து கீழே உள்ள கோரிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டுகிறோம்:

1. ​அரசு டிக்கெட் முன்பதிவு இணையதளத்தை அறிமுகப்படுத்துங்கள்: இது அரசுக்கு வருவாயைக் கொண்டு சேர்ப்பதுடன், ஒரு டிக்கெட்டுக்கு 30 ரூபாய் வரை (இணைய சேவை கட்டணமாக) கூடுதலாகச் செலுத்தும் பார்வையாளர்களுக்கும் பெரிய நிம்மதியாக அமையும்.

2. ​உள்ளாட்சி அமைப்புகளின் வரியை ரத்து செய்யுங்கள்: ஒரே இந்தியா, ஒரே வரி என்ற விதிக்கு மாறாக, இந்தியாவிலேயே இரண்டு வரிகளை விதிக்கும் ஒரே மாநிலமாக நாம் மட்டுமே இருக்கிறோம்.

3. ​சிறு பட்ஜெட் படங்களுக்கான மானியத்தை உயர்த்துங்கள்: தற்போது சிறு திரைப்படங்களுக்கு வழங்கப்படும் சொற்ப மானியத் தொகையை, ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

​இதை ஒரு கோரிக்கை மனுவாக முதல்வரிடம் அளிக்கலாம் என்பது எனக்குத் தெரியும், ஆனால் இந்தக் கோரிக்கைகள் கடந்த 9 ஆண்டுகளாகத் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன. ராஜ்மோகனை குறைத்து மதிப்பிடுவதற்காக இதைச் சொல்லவில்லை, இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே. முதல்வரால் மட்டுமே எங்களுக்குத் தேவையான மிக முக்கிய நிவாரணங்களை வழங்க முடியும். இறைவனின் ஆசி என்றும் இருக்கட்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !