உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரீ ரிலீஸில் 'திரிஷ்யம் 2'வுக்கு கிடைத்த அதிர்ச்சி

ரீ ரிலீஸில் 'திரிஷ்யம் 2'வுக்கு கிடைத்த அதிர்ச்சி


மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியான 'திரிஷ்யம்' படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இதன் மூன்றாம் பாகம் தற்போது தயாராகி வரும் மே 21ம் தேதி ரிலீசாக இருக்கிறது. முதலில் மார்ச் 27ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் கேரள தேர்தல் உள்ளிட்ட சில காரணங்களால் மே 21க்கு மாற்றி வைக்கப்பட்டது. இதற்கிடையே 'திரிஷ்யம் 2' திரைப்படம் ஏற்கனவே கொரோனா காலகட்டத்தில் ஓடிடியில் தான் வெளியாகி இருந்தது என்பதால் அதன் தியேட்டர் அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என தயாரிப்பு நிர்வாகம் இந்த இரண்டாம் பாகத்தை கடந்த ஏப்ரல் 10ம் தேதி ரீ ரிலீஸ் செய்தது.

ரசிகர்கள் ஆர்வமுடன் வருவார்கள் என எதிர்பார்த்த தயாரிப்பு தரப்பிற்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது 'திரிஷ்யம் 2'ம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததுடன் குறைந்த அளவிலான ரசிகர்கள் மட்டுமே திரையரங்குக்கு வந்ததால் தியேட்டருக்கான கட்டணத் தொகையை ஈடு கட்டுவதில் கூட 'திரிஷ்யம் 2' சிரமத்தை சந்தித்துள்ளது என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த மாதம் 'திரிஷ்யம் 3' வெளியாக உள்ள நிலையில் 'திரிஷ்யம் 2' இப்படி ஒரு மோசமான வரவேற்பு கிடைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் திரிஷ்யம் 2 ஏற்கனவே ஓடிடியில் வெளியானதால் அந்த படத்தை அனைவரும் பார்த்து விட்டார்கள் என்பதும் மீண்டும் திரையரங்கில் பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு கமர்சியல் கன்டென்ட் இல்லை என்பதாலும் அடுத்த மாதமே 'திரிஷ்யம் 3' வருவதால் எதற்காக மீண்டும் இரண்டாம் பாகத்தை பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கலாம் என்பதாலும் இந்த இரண்டாம் பாகம் ரீ ரிலீஸில் வரவேற்பை பெற முடியாமல் போய்விட்டது என்றே தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !