உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல்

ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல்


பிரபல சினிமா பாடகி ஆஷா போஸ்லே, மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று தனது 92வது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், ஏ.ஆர்.ரஹ்மான், கமல்ஹாசன் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது இறுதிச்சடங்குகள் நாளை மாலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் பன்முகக் குரல்களில் ஒருவரான ஆஷா போஸ்லே அவர்களின் மறைவால் நான் ஆழ்ந்த வருத்தம் அடைகிறேன். பல தசாப்தங்களாக நீடித்த அவரது தனித்துவமான இசைப் பயணம், நமது கலாசாரப் பாரம்பரியத்தை வளப்படுத்தியதுடன், உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற மக்களின் இதயங்களைத் தொட்டது.

மனதை வருடும் மெல்லிசைகள் முதல் எழுச்சியூட்டும் இசையமைப்புகள் வரை, அவரது குரல் காலத்தால் அழியாத ஒரு பிரகாசத்தைக் கொண்டிருந்தது. அவருடனான எனது உரையாடல்களின் நினைவுகளை நான் என்றென்றும் போற்றிப் பாதுகாப்பேன். அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் இசை ஆர்வலர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவர் வருங்கால சந்ததியினருக்கு தொடர்ந்து உத்வேகம் அளிப்பார். மேலும் அவரது பாடல்கள் மக்களின் வாழ்வில் என்றென்றும் எதிரொலிக்கும்

காங்., எம்.பி., ராகுல்

காங்கிரஸ் எம்.பி., ராகுல் வெளியிட்ட இரங்கல் செய்தி: மாபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது. அவரின் குரல் வழியே, அவரது கலை நம்மிடையே என்றென்றும் அழியாமல் நிலைத்திருக்கும். இந்த துயர நேரத்தில், அவரது அன்புக்குரியவர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட பதிவில், ''இந்தியத் திரையுலகின் பிண்ணனிப் பாடகரும், பல்லாயிரக்கணக்கான இனிமையான பாடல்களின் குரலுக்குச் சொந்தக்காரருமான பத்ம விபூஷன் ஆஷா போஸ்லே இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. தனது இனிய குரலின் மூலம், மொழிகள் கடந்து இந்திய சினிமா ரசிகர்களை கவர்ந்த ஆஷா போஸ்லே, தாதா சாகேப் பால்கே விருது போன்ற ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதோடு, ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன். ஓம் சாந்தி!'' எனப் பதிவிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்

அவர் தனது குரலாலும், ஆளுமையாலும் (ஆரா) என்றென்றும் வாழ்வார்.. என்னே ஒரு கலைஞர்!

நடிகர் ஜூனியர் என்டிஆர்

ஆஷா போஸ்லே அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். பல தசாப்தங்களாக இந்தியத் திரையுலகின் உயிர்நாடியாக விளங்கிய அவரது மாயக்குரல், கோடிக்கணக்கான இதயங்களைத் தொட்டது. தலைமுறைகள் கடந்து நிலைத்து நிற்கும் ஒரு பெரும் பாரம்பரியத்தை அவர் விட்டுச் சென்றுள்ளார்; அவர் என்றும் மரியாதையுடனும் அன்புடனும் நினைவுக் கூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி.

நடிகர் சிரஞ்சீவி

ஆஷா போஸ்லேயின் குரல், தலைமுறைகளைக் கடந்து பல்வேறு உணர்வுகளைச் சுமந்து, இந்தியத் திரையுலகிற்கு ஒரு காலத்தால் அழியாத துணையாக இருந்து வருகிறது. அவர் ஒவ்வொரு பாடலுக்கும் கொண்டு வந்த இயல்பான நளினத்தையும் பன்முகத்தன்மையையும் நான் எப்போதும் போற்றி வந்திருக்கிறேன். இந்தியத் திரையுலகம், தனக்கு ஈடு செய்ய முடியாத குரல்களில் ஒன்றை இழந்துவிட்டது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !