'ஜனநாயகன்' லீக் : பல நடிகர்கள் வேண்டுகோள், நடவடிக்கை எடுக்கப்படுமா?
தமிழக சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தவெக தலைவரும், நடிகருமான விஜய் நடித்த கடைசி படமான 'ஜனநாயகன்' படம் தியேட்டர் வெளியீட்டிற்கு முன்பாகவே இணையங்களில் லீக் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பல நடிகர்கள் அவர்களது கண்டனங்களையும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். விஜய் கட்சி தரப்பிலிருந்து அரசியல் ரீதியாக கடுமையாக விமர்சிக்கப்பட்ட ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கூட இதற்கு தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.
மற்றும் விஜய் ரசிகர்கள் அடிக்கடி 'டிரோல்' செய்யும் நடிகர்களான சூர்யா, சிவகார்த்திகேயன் போன்றோரும் ஆதரவுக் குரல் கொடுத்துள்ளனர். தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, விஜய் தேவரகொண்டா என பலரும் இது குறித்து தங்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
ஒரு படம் வெளியீட்டிற்கு முன்பாகவே இப்படி 'லீக்' செய்யப்படுவது சினிமா உலகத்திற்கே ஆபத்தான ஒன்று. படத்தின் தயாரிப்பாளர், இணை தயாரிப்பாளர், இயக்குனர், எடிட்டர் என நான்கு தரப்புக்குத்தான் இந்தப் படத்தின் 'ஹார்ட் டிஸ்க்' பைல்களை பயன்படுத்தும் அதிகாரம் உள்ளது. வேண்டுமென்றால் நடிகர் விஜய் தரப்புக்கும் அவர்கள் கொடுத்திருக்கலாம். அவரது மேனேஜர் ஜெகதீஷ் தான் இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளர். மேலும், விஜய் கூட படத்தின் காட்சிகளைப் பார்த்து அடிக்கடி ஆலோசனை சொல்லியிருக்க வாய்ப்புண்டு.
'ஜனநாயகன்' படம் ஜனவரி மாதம் பொங்கலை முன்னிட்டு வெளியாக வேண்டிய ஒரு திரைப்படம். அதன் தணிக்கை சான்றிதழ் கிடைக்கப் பெறாததால் தள்ளிப் போனது. அதன் பின் நீதிமன்ற வழக்கு, பின்னர் வழக்கு வாபஸ் என இழுக்கப்பட்டு, கடைசியில் ரிவைசிங் கமிட்டி படத்தைப் பார்த்து சான்றிதழ் வழங்கியுள்ளது.
ஏற்கெனவே படத்தின் வினியோகஸ்தர்கள், ஓடிடி உரிமை பெற்றவர்கள் இப்படத்தின் வியாபாரத்திலிருந்து பின்வாங்கியதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் முழு படமும் வெளிவந்த பிறகு அது சட்ட விரோதம் என்று தெரிந்தும் அதைப் பலரும் டவுன்லோடு செய்து பார்த்திருக்க வாய்ப்புண்டு. அது படத்தின் வியாபாரத்தைப் பெரிதும் பாதிக்கும்.
பல நடிகர்கள், திரையுலகினர் என குரல் கொடுத்துள்ள நிலையில் தேர்தல் காலமாக இருந்தாலும் மத்திய, மாநில அரசுகள் இந்த 'லீக்' குறித்து உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் பலரது கருத்தாக உள்ளது.