ADDED : செப் 12, 2025 08:08 AM

வாழ்க்கை என்பது இப்படித்தான் என ஒவ்வொருவரும் பிறக்கும் போதே முடிவாகி விட்டது என்கிறார்கள் ஞானிகள். இதை உணர்ந்தால் யார் மீதும் வெறுப்பு, பொறாமை ஏற்படாது. எண்ணத்தில் துாய்மை, செயலில் நேர்மை உருவாகும். இந்த உயர்ந்த நிலையை அடைய விரும்பினால் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ருத்ரகோடீஸ்வரர் கோயிலுக்கு வாருங்கள்.
கோயிலுக்குள் காலடி எடுத்து வைத்தவுடன் வெளியுலக பரபரப்பை விட்டு மனம் விலகுவதை உணரலாம். ஆம்! பிரகாரத்தில் நடக்கும் போதே ஆழ்கடலின் அமைதி மனதிற்குள் நிரம்புவதை காண்பீர்கள். அந்த மனநிலையுடன் சுயம்பு மூர்த்தியான ருத்ரகோடீஸ்வரரை தரிசியுங்கள். அப்போது 'நமசிவாய' எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபித்தால் எதிர்காலம் சிறப்பாக அமையும்.
அசுரர்கள் ஆணவத்தால் தேவர்கள், முனிவர்களை துன்புறுத்தினர். கைலாயம் சென்று சிவபெருமானைச் சரணடைய, அவர் தன் திருமேனியில் இருந்து கோடி ருத்திரர்களை வரவழைத்தார். 32 ஆயுதங்களை ஏந்தியபடி புறப்பட்ட அவர்கள் அசுரர்களை அழித்தனர். என்னதான் அசுரர்களாக இருந்தாலும் கொன்றால் பாவம் சேருமே... அதை போக்க இத்தலத்தில் தங்கி சிவனை வழிபட்டனர். தங்களின் பெயராலேயே சுவாமியும், தீர்த்தமும் அமைய வேண்டும் என ருத்திரர்கள் விரும்பியதால் ருத்திர கோடீஸ்வரர், ருத்ரகோடி தீர்த்தம் எனப் பெயர் ஏற்பட்டது. பெண்ணின் நல்லாள் என்ற பெயரில் அம்மன் அருள்புரிகிறாள்.
2600 ஆண்டுகள் பழமையான இக்கோயில் நீண்ட பிரகாரம், மதில் சுவருடன் அமைந்துள்ளது. திருநாவுக்கரசர் வைப்புத் தலமாக இதை பாடியுள்ளார். கோயிலில் பதிகம் பாடும் போது அருகில் உள்ள மற்ற கோயில்களையும் சேர்த்து பாடுவதுண்டு. அக்கோயில்களை 'தேவார வைப்புத்தலம்' என்பர். வாழை மரம் இக்கோயிலின் தல விருட்சமாக உள்ளது. நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்கைக்கு சன்னதிகள் உள்ளன.
எப்படி செல்வது: திருக்கழுக்குன்றத்தில் இருந்து 2 கி.மீ.,
விசேஷ நாள்: விநாயகர் சதுர்த்தி, அமாவாசை, கார்த்திகை சோம வாரம்.
நேரம்: காலை 7:00 - 11:30 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 98941 27930, 99620 05500
அருகிலுள்ள கோயில்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் 2 கி.மீ., (நிம்மதிக்கு...)
நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 94428 11149, 044 - 2744 7139