/
உலக தமிழர்
/
ஆசியா
/
செய்திகள்
/
கொரிய-தமிழரசி செம்பவளத்தின் வரலாற்றைத் தேடி ஒரு சுற்றுலா பயணம்
/
கொரிய-தமிழரசி செம்பவளத்தின் வரலாற்றைத் தேடி ஒரு சுற்றுலா பயணம்
கொரிய-தமிழரசி செம்பவளத்தின் வரலாற்றைத் தேடி ஒரு சுற்றுலா பயணம்
கொரிய-தமிழரசி செம்பவளத்தின் வரலாற்றைத் தேடி ஒரு சுற்றுலா பயணம்
ஜூலை 02, 2025

கொரிய தமிழ்ச் சங்கமும், தேகு இந்தியன்ஸ் அமைப்பும் ஒருங்கிணைந்து தென்கொரியாவின் புசான் மாநகரில் இன்பச் சுற்றுலா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தன. இச்சுற்றுலாவிற்கு, தேகு, போஹாங், புசான் ஆகிய பகுதியிலிருந்து இந்திய மற்றும் கொரிய உறவுகள் (24 பேர்) ஆர்வமுடன் முன்பதிவு செய்து கலந்துகொண்டார்கள்.
காலை வேளையில் சுற்றுலா பயணம், புசான் மாநகரின் காயா பகுதியில் அமைந்துள்ள செம்பவளம் அல்லது ஹொ ஹுவாங்-ஒக் (Heo Hwang-ok) என அழைக்கப்படும் அரசியின் நினைவிடத்திலிருந்து தொடங்கியது. செம்பவள அரசி கிபி 48- இல் பண்டைய தமிழ்நாட்டின் ஆய் சிற்றரசிடமிருந்து கடல்வழிப் பயணம் மேற்கொண்டு கொரியாவை வந்தடைந்து, மன்னர் கிம் சுரோவை மணந்து நல்லாட்சி புரிந்து, தமிழ்ச் சொற்களும், தமிழர் கலாச்சாரமும் கொரிய மண்ணில் பரவக் காரணமாயிருந்த வரலாற்று நாயகி.
தமிழ் அரசியின் கல்லறை மேடு
சம்குக் யுசா என்ற புத்தகத்தில் இடம் பெற்ற அரசியின் வரலாற்றைக் கேட்டறிந்த சுற்றுலாவில் கலந்துகொண்ட உறவுகள், அப்பகுதியில் காணப்படும் அரசியின் மணல் மேடான கல்லறை (Royal Mound Tomb) மற்றும் அரசி தன்னுடன் கொண்டு வந்ததாகக் கருதப்படும் பகோடா (Pagoda) எனப்படும் கல் அடுக்கு ஆகியவற்றைக் காணுகையில் மெய் சிலிர்த்துப் போனார்கள். அருகாமையிலுள்ள குஜிபொங் (Gujibong) குன்றின் மேல் காணப்படும் கல்திட்டை (Dolmen) வகையைச் சார்ந்த பெருங்கல் (Megalith) மற்றும் கிமே தேசிய அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற கலைப்பொருள்கள் அனைத்தும் பண்டைய கொரியாவின் வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பினை நல்கின.
கொரிய தமிழ்ச் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக நட்புறவில் இருந்துவரும் காயா கலாச்சார மையத்தின் தலைவர் புத்த துறவி தோ மியொங் (Do Meyong) அழைப்பின் பேரில் சுற்றுலாபயணிகளை நேரில் சந்தித்து ஆசி வழங்கியதோடு பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தார். அதன் பிறகு அருங்காட்சியக வளாகத்தின் அருகில் நிறுவப்பெற்ற இந்திய தேசத் தந்தை மகாத்மா காந்தியின் சிலையை கொரிய மண்ணில் கண்டு சுற்றுலா உறவுகள் பூரித்துப் போனார்கள். நண்பகல் வேளையில் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.
கடற்கரை, நீரூற்று ஒளி நிகழ்ச்சி
காலைப் பொழுதில் வரலாற்று அறிவியல் மற்றும் கலைத் தேடலுக்கு விருந்தளித்த சுற்றுலா, மாலை வேளையில் பாரம்பரியக் கிராமம், கடற்கரை, நீரூற்று ஒளி நிகழ்ச்சி என கண்கவர் காட்சிகள் அடங்கிய பயணமாக உருமாறியது. கம்ஜொன் பாரம்பரியக் கிராமத்தின் (Gamcheon cultural village) வண்ணமிகு வீடுகளை ஒன்றன்மேல் ஒன்றாக மலையில் அடுக்கி வைத்தாற்போல் கொண்ட தோற்றம் அனைவரையும் கண்டுகளிக்க வைத்ததோடு, பல புகைப்படங்களை எடுக்கவும் தூண்டியது.
அதன் பிறகு, ததேப்போ கடற்கரைக்குச் (Dadaepo beach) சென்றடைந்த உறவுகள் மாலைக் கதிரவன் விடைபெறும் வரை சமதளமான, தெளிவான கடற்கரைப் பரப்பில் கால்களால் நீருடன் உறவாடி மகிழ்ந்தார்கள். கடற்கரை மணற்பரப்பில் அனைவரும் இணைந்துப் பருகிய தேநீரின் சுவை அலாதியானது. இறுதியாக, 8 மணியளவில் நடைபெற்ற நீரூற்று ஒளி நிகழ்ச்சியைக் கண்ட மனநிறைவுடன், அனைவரும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டுவிடைபெற்றார்கள். சங்கத்தால் நடைபெறவிருக்கும் மீண்டுமொரு நிகழ்ச்சியில் அனைவரையும் சந்திக்க ஆர்வமுடன் இருப்பதாக சுற்றுலாவில் கலந்துகொண்ட உறவுகள் பின்னூட்டமாக கருத்து தெரிவித்தனர்.
இந்நேரத்தில், கொரிய தமிழ்ச் சங்கத்தின்தலைவர்முனைவர் அரவிந்த ராஜா தனது நன்றியுரையில், சுற்றுலா சிறக்க உதவிபுரிந்தசங்கத்தின் ஆளுமைகள் அனைவருக்கும், குறிப்பாக, முனைவர் செலஸ்டின் ராஜா, சம்பத் குமார், மணிகண்டன், முனைவர் முத்துச்சாமி, பொறியாளர் ஆனந்த் ஆகியோருக்கும், கொரிய தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து சுற்றுலா ஏற்பாட்டிற்கு உறுதுணையாகச் செயல்பட்ட தேகு இந்தியன்ஸ் அமைப்பிற்கும், அதன் தலைவர் முனைவர் வாசுதேவுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். பொருண்மிய மேற்பார்வை செய்த முனைவர் பழனியாண்டியையும், உணவு மற்றும் தேநீரை அறுசுவையுடன் படைத்த இணையர் முனைவர் தீபன் மற்றும் பிரேமினியையும்வெகுவாகப் பாராட்டினார். மேலும், இச்சுற்றுலா தமிழ் அரசியின் பெருமைமிகு வரலாற்றை நேரில் கண்டு அறிந்துகொள்வதற்கு நல்லதொரு வாய்ப்பை நல்கியுள்ளது எனக் கூறிஅதன் நோக்கத்தை வெளிப்படுத்தினார்.
- தினமலர் வாசகர் முனைவர் செலஸ்டின் ராஜா, செயலாளர், கொரிய தமிழ்ச் சங்கம்
Advertisement