'டம்... டம்... டம்...' இன்னும் துடிக்கிறது ஒரு பாரம்பரியம்
'டம்... டம்... டம்...' இன்னும் துடிக்கிறது ஒரு பாரம்பரியம்
UPDATED : ஜூலை 19, 2026 08:41 AM
ADDED : ஜூலை 18, 2026 07:31 PM

சற்று தொலைவில் டிரம்ஸ் முழங்க, ட்ரம்பெட் இசை காற்றைக் கிழித்து வர, கிளாரினெட்டின் மென்மையான ஓசை காதுகளை வருடும். திருமணத்தில் மாப்பிள்ளை அழைப்பாக இருந்தாலும், விஐபி யாராவது வருகையாக இருந்தாலும் அந்த நிகழ்வுக்கு கம்பீரம் சேர்ப்பது பேண்ட் வாத்தியம்தான்.
மேற்கத்திய இசை வடிவமாக தமிழகத்துக்கு வந்த இந்தக் கலை, இன்று பல குடும்பங்களின் தலைமுறைத் தொழிலாக மாறியுள்ளது. ஆனால் டிஜிட்டல் இசை, புதிய கலாச்சார தாக்கங்கள் காரணமாக பேண்ட் கலைஞர்களின் வாய்ப்புகள் குறைந்து வருவது அவர்களின் வேதனையாக உள்ளது.
''எங்க தாத்தா, அப்பா, சித்தப்பானு... நாங்க நாலு தலைமுறையா இந்தக் கலையைத்தான் நம்பி வாழ்றோம்,'' என்கிறார் 33 ஆண்டுகளாக இத்துறையில் இருக்கும் ஜார்ஜ் வில்லியம். காவல்துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற அவர், தற்போது தமிழ்நாடு பேண்ட் அசோசியேஷன் பொருளாளராகவும் உள்ளார். தமிழகம் முழுவதும் 1,500 கலைஞர்கள், இச்சங்கத்தின் கீழ் செயல்பட்டு வருவதாக கூறுகிறார்.
''ஒரு காலத்தில் திருமணம் என்றாலே பேண்ட் வாத்தியம் இருந்தது. இப்போது செண்டை மேளம் உள்ளிட்ட புதிய இசைக் கருவிகளின் வருகையால் வாய்ப்புகள் குறைந்துள்ளன. அதற்கேற்ப நாங்களும் புதிய சினிமா பாடல்களைப் பயிற்சி செய்து வாசித்து வருகிறோம்,'' என்கிறார் ஜார்ஜ் வில்லியம்.
பேண்ட் வாத்தியம் என்பது ஒருவரால் நிகழ்த்தப்படும் கலை அல்ல. பத்து பேருக்கும் மேற்பட்டோர் இணைந்து வாசிக்கும் கூட்டுக் கலை. அதனால்தான் தேசிய விழாக்கள், அரசு நிகழ்ச்சிகள், ராணுவ அணிவகுப்புகளில் இன்றும் பேண்ட் இசைக்கே தனி மரியாதை உள்ளது. அரசு விழாக்களில் தற்போது வாய்ப்புகள் கிடைத்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோல், பள்ளிகளில் இந்தக் கலையை அறிமுகப்படுத்தி, அரசு வேலைவாய்ப்புகளில் சலுகைகள் வழங்கினால், பாரம்பரிய பேண்ட் வாத்தியக் கலைக்கும், அதை நம்பி வாழும் கலைஞர்களின் வாழ்க்கைக்கும் புதிய ஒளி பிறக்கும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.
