/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
ஓய்வுக்கு பின் ஒரு தேடல்! வரலாறு படைக்கும் தலைமை ஆசிரியர்
/
ஓய்வுக்கு பின் ஒரு தேடல்! வரலாறு படைக்கும் தலைமை ஆசிரியர்
ஓய்வுக்கு பின் ஒரு தேடல்! வரலாறு படைக்கும் தலைமை ஆசிரியர்
ஓய்வுக்கு பின் ஒரு தேடல்! வரலாறு படைக்கும் தலைமை ஆசிரியர்
UPDATED : ஜன 25, 2026 10:59 AM
ADDED : ஜன 25, 2026 10:58 AM

சிவகங்கை வரலாற்றை அலசிய மண்ணின் மைந்தர்... ஆசிரியப் பணியை முடித்து 87 வயதிலும் வரலாற்று ஆய்வாளர் பணியை தொடர்பவர்... எளிய நடையில் பல வரலாற்று நுால்களை எழுதிய ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் பாலகிருஷ்ணன், தன் நெகிழ்வான அனுபவம் குறித்து பகிர்கிறார்...
சொந்த ஊர் சிவகங்கை. அப்பா முத்துராமலிங்கம்பிள்ளை, தலைமை காவலர். சிறுவயதில் நல்ல படிப்பாளியான நான் படைப்பாளி ஆனதற்கு காரணம் அம்மா ஆறுமுகத்தம்மாள். 1856ல் தோற்றுவிக்கப்பட்ட சிவகங்கை மன்னர் நடுநிலை, உயர்நிலை பள்ளிகளில் பயின்றேன். பயின்ற பள்ளியிலேயே பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்தேன். அரசுப் பள்ளியில் 3 ஆண்டுகள் பணிபுரியும் ஆசிரியர்கள் 'போனபைடு டீச்சர்' முறையில் மேற்படிப்பு பயில முடியும். அவ்வகையில் வரலாறு மீதான ஆர்வத்தால் முதுகலை பட்டம் பெற்றேன். 1994ல் மதுரை காமராஜ் பல்கலையில் முனைவர் பட்டம் பெற பதிவு செய்தேன். எனக்கு வழிகாட்டியாக பேராசிரியர் சர்வேஸ்வரன் இருந்தார்.
'ஹிஸ்டரி ஆப் சிவகங்கா'
நான் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்றதால் பணிச்சூழல் காரணமாக 'ஹிஸ்டரி ஆப் சிவகங்கா' எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க தாமதமாகிவிட்டது. பின் 1997ல் ஓய்வு பெற்றேன். அதன்பின் பல்கலையில் சமர்ப்பித்தபோது எனக்கான வழிகாட்டியும் ஓய்வு பெற்றுவிட்டார் என்றும், காலதாமத காரணத்தால் ரூ.20 ஆயிரம் கட்ட வேண்டும் என்றனர்.
பணி ஓய்வுக்கு பின் இப்பட்டம் பயன் தராது என்பதால் அதை விட்டுவிட்டு ஆவணங்கள் அடிப்படையில் வரலாறுகளை எழுதும் முயற்சியில் இறங்கினேன். 1959ல் கண்ணதாசன் தயாரிப்பில் வெளிவந்த 'சிவகங்கை சீமை' திரைப்படம் என்னை கவர்ந்தது. அதில் மருது சகோதரர்களை மட்டுமே குறிப்பிட்டிருப்பர். அவர்கள் மட்டுமின்றி சசிவர்ண தேவர், முத்துவடுகநாதர், வேலுநாச்சியார், தாண்டவராயபிள்ளை, மருதநாயகம் போன்றவர்களை பற்றியும் எழுத வேண்டும் என எண்ணினேன்.
பல ஆராய்ச்சிகள் புரிந்து, சென்னை ஆவண காப்பகத்தில் ஆதாரங்கள் சேகரித்து 'விடுதலைப் போரின் விடிவெள்ளிகள்' எனும் முதல் புத்தகம் எழுதினேன். அதற்கு வரவேற்பு கிடைத்தது. சிவகங்கையில் உள்ள 'கங்கை', பாலகிருஷ்ணனில் உள்ள 'பாணன்' இரண்டையும் சேர்த்து 'கங்கை பாணன்' என புனைப் பெயர் வைத்துக் கொண்டேன். தொடர்ந்து, 'விடுதலைப் போரை தொடங்கி வைத்த வீரமருதுபாண்டியர்', 'சிவகங்கை சாணக்கியன் தளவாய் தாண்டவராய பிள்ளை', 'விடுதலைப் போரில் சிவகங்கை சீமை', 'சிவகங்கை மாவட்டம் ஊரும் பேரும்' உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நுால்களை எழுதியுள்ளேன். நானும் பேராசிரியர் விவேகானந்தமும் இணைந்து 'விடுதலைப் போரில் சின்னமருது' என்ற தலைப்பில் ஆங்கில நுாலை தமிழில் மொழிபெயர்த்தோம்.
'பிரதானி முத்திருளப்ப பிள்ளை' நுாலை ஒரு மாதத்தில் எழுதி முடித்தேன். 'சிவகங்கை சீமை வரலாறு' நுால் எழுத ஓராண்டு தேவைப்பட்டது. அந்நுால் எனது ஆய்வுக்கட்டுரை அடிப்படையில் அமைந்ததால் மனதிற்கு நெருக்கமான நுால். சிவகங்கை குறித்து ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் என்னையே தொடர்பு கொள்கின்றனர்.
தற்போது வரை கையால் தான் எழுதுகிறேன். கணினி பயன்படுத்துவது இல்லை. 3 முறை நானே சரி பார்ப்பேன். நிறைய வரலாற்று புத்தகங்கள் படிப்பேன். அதன் தரவுகள் அடிப்படையில் எழுதுகிறேன்.
ஒவ்வொரு நுாலிலும் ஆதாரங்களை குறிப்பிட்டிருப்பேன். ஓய்வுக்கு பின் ஒரு எழுத்தாளராக என்னை மாற்றியதில் தினமலர் நாளிதழுக்கு முக்கிய பங்குண்டு. என்னுடைய நுால்களை 'படிக்கலாம் வாங்க' பகுதியில் பிரசுரம் செய்ததன் மூலம் பலர் என்னை தொடர்பு கொண்டு வாழ்த்தினர். அது மேலும் எழுதுவதற்கு ஊக்கமளித்தது.
பாராட்டுகளும் அங்கீகாரமும்
'சிவகங்கை சீமை வரலாறு' நுாலுக்கு மதுரை கிருஷ்ணா பவுண்டேஷன், சென்னை தேஜஸ் பவுண்டேஷன் இணைந்து பரிசு வழங்கியது. 'ஹிஸ்டரி ஆப் சிவகங்கா' நுால் காரைக்குடி அழகப்பா பல்கலையில் வரலாறு முதுகலை மாணவர்களுக்கு பாடநுாலாக உள்ளது.
2020ல் மகனின் திடீர் இழப்பால் மனம் தளர்ந்துவிட்டேன். மன அழுத்தத்தில் இருந்து விடுபட தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். 3 நுால்கள் வெளிவர உள்ளன. இன்றைய தொழில்நுட்ப உலகில் இளைஞர்கள் புத்தகம் படிப்பது குறைவு. 30 ஆண்டுகள் ஆசிரியப்பணி ஆற்றியுள்ளேன். அப்போது இருந்த மாணவர்களின் மனநிலை தற்போது இல்லை. உலக வரலாறு களை தெரிந்து கொள்வதற்கு முன் நம்மண்ணின் வரலாற்றை தெரிந்து வைத்திருப்பது அவசியம். இவ்வாறு பகிர்ந்தார்.

