sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/தலையங்கம்/ வாஜ்பாய் பாணிக்கு மாறும் கட்டாயத்தில் பிரதமர் மோடி

வாஜ்பாய் பாணிக்கு மாறும் கட்டாயத்தில் பிரதமர் மோடி

வாஜ்பாய் பாணிக்கு மாறும் கட்டாயத்தில் பிரதமர் மோடி


PUBLISHED ON : ஜூன் 11, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 11, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லோக்சபா தேர்தலில், பா.ஜ., 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது, பெரும்பான்மைக்கு, 32 இடங்கள் குறைவாகும். கூட்டணி கட்சிகள் பெற்றுள்ள இடங்களையும் சேர்த்தால், 292 இடங்களை பிடித்துள்ளது. இதனால், தே.ஜ., கூட்டணியின் தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டு, மீண்டும் பிரதமராக பதவியேற்று உள்ளார்.

ஆயினும், கூட்டணியில் அதிக இடங்களை பிடித்துள்ள சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் மற்றும் பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளைச் சார்ந்தே, மோடி 3.0 அரசு இயங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அதுமட்டுமின்றி, காங்கிரஸ் தலைமையிலான 'இண்டியா' கூட்டணி, 234 இடங்களை பிடித்து வலுவான எதிரணியாக உருவெடுத்துள்ளது. உ.பி., மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்ததால், காங்கிரஸ் எம்.பி.,க்களின் பலம் அதிகரித்துள்ளது. அதாவது, உ.பி.,யில் மட்டும், காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணி, 44 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த, 2019 லோக்சபா தேர்தலில், இந்த மாநிலத்தில், 69 இடங்களைப் பிடித்த பா.ஜ., இம்முறை, 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதுவே, பா.ஜ., பெரும்பான்மை பெற முடியாமல் போனதற்கு முக்கிய காரணம். அதேபோல, மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்திலும், பா.ஜ., பின்னடைவை சந்தித்துள்ளது.

தற்போதைய தேர்தல் முடிவுகள் வாயிலாக, தேசிய அரசியலில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கூட்டணி அரசு அமைந்துள்ளது. காங்கிரஸ் கட்சியும், 2014க்கு பிறகு, கேபினட் அந்தஸ்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறும் நிலைக்கு உயர்ந்துள்ளது.

கடந்த, 26 ஆண்டுகளுக்கு முன், 1998ல் வாஜ்பாய் தலைமையில் உருவான தேசிய ஜனநாயக கூட்டணி தான், முதல் முறையாக பா.ஜ., தலைமையிலான கூட்டணி ஆட்சியாக அமைந்தது. 1998 முதல், 2004 வரை அவரின் அரசு நீடித்தது. அதன்பின், பா.ஜ., தலைமையில், தற்போது தான் கூட்டணி அரசு அமைகிறது. அதுவும், அரசியலில் பேரம் பேசி காரியம் சாதிப்பதிலும், அணி மாறுவதிலும் கெட்டிக்காரர்களான, சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ் குமாரின் ஆதரவுடன் அரசு அமைந்துள்ளது.

வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, கூட்டணி கட்சிகளின் எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்பதால், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, அரசியல் சட்டத்தின், 370வது பிரிவை ரத்து செய்வது, நாடு முழுதும் ஒரே சிவில் சட்டத்தை அமல்படுத்துவது ஆகிய மூன்று முக்கிய பிரச்னைகளில் எந்த முடிவும் எடுக்காமல், அவை ஓரம் கட்டப்பட்டிருந்தன.

ஆனால், 10 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்த மோடி, கூட்டணி கட்சிகளின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில், எந்த முடிவையும் எடுத்ததில்லை. அவரும், அமித் ஷாவும் சேர்ந்து எடுத்த முடிவுகள் தான் அமலுக்கு வந்தன. அதற்கு காரணம், லோக்சபாவில் பா.ஜ., பெரும்பான்மை பலம் பெற்றிருந்ததே. இந்த பலத்தால் தான், ராமர் கோவில் கட்டுமானம், அரசியல் சட்டத்தின், 370வது பிரிவு ரத்து போன்றவற்றின் திடமான முடிவுகளை எடுக்க நேரிட்டது.

ஆனால், இம்முறை, அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்புடன் தான், முக்கியமான முடிவுகளை மோடி எடுக்க வேண்டிய கட்டாயம் உருவாகிஉள்ளது. அதாவது, வாஜ்பாய் பாணியை பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு மோடி ஆளாகியுள்ளார். குறிப்பாக, பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம், ஜாதி வாரி கணக்கெடுப்பு, அக்னீவீர் திட்டம் போன்றவற்றில், கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெறுவதில் மிகவும் மென்மையான அணுகுமுறையை பின்பற்ற வேண்டியது அவசியம்.

அத்துடன், காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணியும் பலமான எதிரணியாக லோக்சபாவில் அமர்வதால், ஒவ்வொரு பிரச்னையிலும், மோடி அரசு கடும் சவால்களை சந்திக்க நேரிடும். மொத்தத்தில் கூட்டணி அரசை மோடி வழிநடத்திச் செல்வது, முள்மேல் அமர்ந்திருக்கும் கதையாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இது ஒருபுறமிருக்க, தற்போதைய அரசியல் சூழ்நிலையால், பா.ஜ., கட்சியிலும், அதன் செயல்பாடுகளிலும் மாற்றங்கள் நிகழவும் வாய்ப்புகள் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us