/
வாராவாரம்
/
சிந்தனைக் களம்
/
திருக்கோவில் காசிலே தெவச சாப்பாடு போடாதே!
/
திருக்கோவில் காசிலே தெவச சாப்பாடு போடாதே!
PUBLISHED ON : பிப் 03, 2026 04:58 AM

ராம ரவிகுமார்,
நிறுவனத் தலைவர், இந்து தமிழர் கட்சி
தெய்வீக தமிழகத்தில், நம் முன்னோர், மன்னர்கள் பல்லாயிரக்கணக்கான கோவில்களை கட்டினர். திருக்கோவில்களில் கலை, பண்பாடு, பாரம்பரியம், நீதி பரிபாலனம், மருத்துவம் வாழ்வியலுக்கு தேவையான அனைத்தையும் கற்றுக் கொடுத்தனர்.
அன்னியர் ஆட்சி முடிந்து, மக்களாட்சி வந்த பின், நம் அரசு மதச்சார்பற்றது என்று பிரகடனப்படுத்தப்பட்டது. 'அனைத்து மதங்களையும், சமமாக பாவித்து செயல்படுவோம்' என்று உறுதி எடுத்த ஆட்சியாளர்கள், ஹிந்து கோவில்களை மட்டும் தங்கள் நிர்வாகத்தின் கீழ் வைத்துக் கொண்டனர்.
பிற மத வழிபாட்டுத் தலங்களை, அந்தந்த மதத்தவரே நிர்வாகம் செய்ய அனுமதித்தனர்.
கடவுளே உரிமையாளர்
கோவில் வரவு - செலவுகளை கண்காணிப்பது, முறைகேடுகளை சீர் செய்வது தான், சட்டப்படி ஹிந்து சமய அறநிலையத் துறையின் கடமை.
ஆனால், அறநிலையத் துறையோ, தன்னை கோவில்களின் உரிமையாளராக நினைத்துக் கொண்டு, கோவில்களை விட்டு வெளியேறாமல் அட்டூழியம் செய்து வருகிறது.
ஒவ்வொரு கோவிலுக்கும் அங்குள்ள கடவுள் தான் உரிமையாளர் என்பது சட்டம். கோவில்களில், அறப்பணிகள், சமூகப் பணிகள் நடக்க வேண்டும் என்பதற்காக, நிலங்களைத் தானமாக அளித்தனர். நாயன்மார்களும், ஆழ்வார்களும் கோவில்களை மையமாகக் கொண்டே தமிழை வளர்த்தனர்.
கோவில்களை கட்டிய மன்னர்கள், தங்களை எந்தச் சூழலிலும் முன்னிலைப்படுத்தாமல், இறைவனுக்கு தொண்டு செய்யும் அடியவராக தங்களை நினைத்து, ஆட்சி செய்து வந்தனர்.
ஆனால், மதச்சார்பற்ற அரசு என்று சொல்லி கோவில்களை கைப்பற்றிய திராவிட இயக்க ஆட்சியாளர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்களால் பாடப்பட்ட கோவில்களை எல்லாம், வியாபார கேந்திரங்களாக மாற்றினர்.
ஆண்டவன் சொத்தை, ஆள்வோர் சொத்தாக மாற்றி, பல இடங்களை சட்டவிரோதமாக தனி நபர்களுக்கு தாரை வார்த்து, சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி, பிற தேவைகளுக்கு கையகப்படுத்தி வருகின்றனர் .
கோவில்களில் காணிக்கையாக பெறப்படும் பணம் பொதுப்பணம் அல்ல; அரசின் பணமும் அல்ல. பக்தர்கள் மனமுவந்து அள்ளிக் கொடுக்கும் பணம். அந்தந்த கோவில்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு மட்டுமே காணிக்கை பணத்தை பயன்படுத்த வேண்டும்.
இப்படித்தான் செய்ய வேண்டும் என்று பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்களும் அழுத்தம் திருத்தமாக உறுதிப் படுத்தியுள்ளன.
மதச்சார்பற்ற அரசு, தங்கள் அரசியல் கருத்துக்களை ஹிந்து கோவில்களில் மட்டும் திணிக்கிறது. அதற்கு கோவில்களின் வருமானத்தையே பயன்படுத்துகிறது. 'பிப்ரவரி 3ம் தேதி, முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் நினைவு நாள்.
'அந்நாளில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி, அன்னதானம் செய்து, காணிக்கையாக வந்த வேட்டி, சேலைகளை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்' என்று சுற்றறிக்கை அனுப்புகிறது.
ஆனால் நாயன்மார்கள், ஆழ்வார்கள் திருநட்சத்திர தினங்களில் இதுபோன்ற சிறப்பு வழிபாடு, அன்னதானம் இல்லை.
ஹிந்து மதத்தையும், ஹிந்து கோவில்கள், தெய்வங்களையும் இழிவாக பேசிய அண்ணாதுரைக்கு, ஹிந்து கோவில்களில் சிறப்பு வழிபாடு எதற்கு? அவருடைய நினைவு நாளுக்கு தெவசச் சோறு எதற்கு போட வே ண்டும்?
பக்தர்கள் தங்களது பிரார்த்தனையை நிறைவேற்ற அளித்த காணிக்கை பணத்தை எடுத்து, கடவுள் மறுப்பாளர் அண்ணாதுரையின் நினைவு நாளில், அன்னதானம் போடுவது என்பது கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போலத்தான்.
வீண் ஜம்பம்
'ஹிந்து கோவில்களில் மட்டும் அண்ணாதுரை நினைவு நாளுக்கு அன்னதானம் போட வேண்டும்' என்று சுற்றறிக்கை அனுப்பும் தமிழக அரசு, 'சர்ச், மசூதிகளில் அண்ணாதுரை நினைவு நாளுக்கு அன்னதானம் போடுங்கள்; ஏழைகளுக்கு சேலை - வேட்டி வழங்குங்கள்' என்று சுற்றறிக்கை அனுப்பாமல் விட்டுள்ளது. இது தான் மதச்சார்பற்ற அரசின் லட்சணம்.
அண்ணாதுரைக்கு முன்பு குமாரசாமி ராஜா, ஓமந்துார் ராமசாமி ரெட்டி யார், காமராஜர், பக்தவத்சலம் என நேர்மையான முதல்வர்கள் தமிழகத்தை ஆட்சி புரிந்துள்ளனர்.
அவர்கள் நினைவு தினங்களிலோ, நாயன்மார்கள், ஆழ்வார்கள், மகான்கள் நினைவு தினங்களிலோ அன்னதானம் போடுங்கள் என்று, ஒரு நாளும் சொல்லாத இந்த அரசு, அண்ணாதுரையின் நினைவு நாளுக்கு தெவசச்சோறு போட வேண்டும் என்று உத்தரவிடுவதற்கு, ஹிந்து சமய அறநிலையத் துறை சட்டத்தில் எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா?
அண்ணாதுரை ஆதரவாளர்கள், தங்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் கட்சி கட்டடங்களிலும் அன்னதானம் போடுவதில், யாருக்கும் ஆட்சேபனை இல்லை.
கோவில்களில் அன்னதானத்திற்கு ஆகும் செலவுகளை, அண்ணாதுரை ஆதரவாளர்கள் ஏற்கலாம்; அதற்காக, நிரந்தர வைப்பு நிதி செலுத்தலாம்.
இன்று அண்ணாதுரை நினைவு நாளுக்கு அன்னதானம் போடச் சொல்லும் அரசு, நாளை, 'ஈ.வெ.ரா., பிறந்தநாள், நினைவுநாள், கருணாநிதி பிறந்தநாள், நினைவுநாள் ஆகியவற்றுக்கும் சிறப்பு வழிபாடு, அன்னதானம் செய்யுங்கள்' என்று உத்தரவு போட்டால் என்ன செய்வது?
அரசியல் பின்பலம் கொண்ட நபர்களை, கோவில்களில் அறங்காவலர்களாக நியமித்ததன் விளைவு, இதுபோன்ற அநியாயங்கள் ஹிந்து கோவில்களில் மட்டும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
கோவில்களில் தினசரி அன்னதானம் நடக்கிறது. அப்படியிருக்க, அண்ணாதுரை நினைவு நாளுக்கு மட்டும், சிறப்பு வழிபாடும் சிறப்பு அன்னதானமும் எதற்கு?
பல்லாயிரக்கணக்கான கோவில்களில் ஒரு வேளைக்குக்கூட விளக்கு ஏற்ற வழி இல்லை; வழிபாடும் இல்லை. கலை பொக்கிஷங்களாக காக்கப்பட வேண்டிய கோவில்கள் சிதிலமடைந்து, அழிவின் விளிம்பில் சிக்கிக் கொண்டிருக்கின்றன. அதையெல்லாம் காக்க அரசுக்கு வக்கில்லை.
'நாலாயிரம் கோவில்களுக்கு மேலாக நாங்கள் கும்பாபிஷேகம் செய்து விட்டோம்' என்று தங்கள் தோளிலே, தாமே தட்டிக் கொடுத்துக் கொண்டு பாராட்டு பத்திரம் வாசிக்கும் தி.மு.க., அரசு, அரசு பணத்தில் இருந்து கும்பாபிஷேகம் நடத்தவில்லை. உபயதாரர்களை வைத்து கும்பாபிஷேகம் செய்துவிட்டு, வீண் ஜம்பம் செய்கிறது.
'ஊரில் கல்யாணம்; மார்பில் சந்தனம்' என்ற சொலவடை போல, உபயதாரர்கள் செய்த திருப்பணிக்கு, அரசு 'ஸ்டிக்கர்' ஒட்டிக்கொண்டு, நடப்பதை தங்கள் சாதனை என பெருமை பீற்றிக் கொள்ள எப்படித்தான் மனசு வருகிறதோ?
சட்டவிரோதமாக, ஆகம விரோதமாக, மத நம்பிக்கைக்கு எதிராக பேசிய அண்ணாதுரை நினைவு நாளுக்கு அன்னதானம் என்ற பெயரில் தெவச சோறு போடுவதை உடனே நிறுத்த வேண்டும். அதற்காக, ஒவ்வொரு ஹிந்து பக்தரும் கேள்வி எழுப்ப வேண்டும்.
இல்லையெனில், வரிகொடா இயக்கம் போல, கோவில் உண்டியல்களில் காணிக்கை செலுத்துவதை நிறுத்த வேண்டும்.
'ஹிந்து கோவில்களில் மட்டும் அண்ணாதுரை நினைவு நாளுக்கு அன்னதானம் போட வேண்டும்' என்று, சுற்றறிக்கை அனுப் பும் தமிழக அரசு, சர்ச், மசூதிகளில் அண்ணா துரை நினைவு நாளுக்கு அன்னதானம் போடுங்கள்; ஏழைகளுக்கு
சேலை - வேட்டி வழங்குங்கள் என்று சுற்றறிக்கை அனுப்பாமல் விட்டுள்ளது
கோவில்களில் காணிக்கையாக பெறப்படும் பணம் பொதுப்பணம் அல்ல; அரசின் பணமும் அல்ல. பக்தர்கள் கொடுக்கும் பணம்

