
'இவனை கட்டிப் பிடிச்சியா; இவனுக்கு முத்தம் கொடுத்தியா; எந்த இடத்துல கொடுத்தே?' - இப்படி அந்த தரம் கெட்டவன் கேட்டப்போ, சச்சியால அவனை ஒண்ணும் செய்ய முடியலை.
'எனக்கும் ஒரு முத்தம் கொடேன்'னு அவன் என்னை நெருங்கி வந்தப்போ, சச்சியால அவனை தண்டிக்க முடியலை.
கிட்டத்தட்ட ஒரு ராத்திரி முழுக்க அவன் எங்களை கொடுமைப்படுத்தினான். கார்ல நானும் அவனும் இருந்த ஒரு சூழல்ல, கார் கதவை படார்னு சாத்தி, வெளியே நின்னுட்டு இருந்த சச்சியை பதற வைச்சான். அப்பவும், சச்சியால ஒண்ணும் பண்ண முடியலை!
அவன் எங்ககிட்டே பணம் கறந்துட்டு காரை விட்டு இறங்கினதுக்கு அப்புறம், நான் காதலிக்கிற சச்சி என்கிட்டே கேட்டான்...
'வசு... கார் கதவை அடைச்சதும், அவன் உன்னை என்ன பண்ணினான்?'
'ஏன் சச்சி... இவ்வளவு நடந்தும், நீ எப்படியிருக்கே வசுன்னு உனக்கு கேட்கத் தோணலை இல்ல?'
'அது இருக்கட்டும். நான் கேட்டதுக்கு பதில் சொல்லு வசுதா... அவன் உன்னை என்ன பண்ணினான்; ஒரு ஆம்பளையா நான் அதை தெரிஞ்சுக்கணும்!'
சச்சி இப்படி சொன்னதும் நான் சொன்னேன்...
'இந்த ஆம்பளைத்தனத்தை நேத்து நான் பார்க்கலையேடா!'
சச்சிகிட்டே பதில் இல்லை; அந்த கணத்துல இருந்து, சச்சி மேல எனக்கு காதலும் இல்லை.

