
பாவம் மாதவ்; என்னால, அவருக்கு முழுமையான தாம்பத்யத்தை கொடுக்க முடியலை.
காரணம்... என் சின்ன வயசுல நடந்த ஒரு சம்பவம். பள்ளியில இருந்து வீடு திரும்பிட்டிருந்த என்னை, ஒரு குடிகார மிருகம் தன் இச்சைக்கு பலியாக்கிடுச்சு. அந்த கொடுமையான நினைவுகள், ஆறாத காயமா இன்னும் என் மனசுல இருக்குது; கனவுகள்ல, வெறித்தனமா துரத்துது.
இது சம்பந்தமா மாதவ்கிட்டே பேசுறப்போ எல்லாம், 'நாம பிரிஞ்சிடலாமே'ன்னு சொல்லுவேன். அப்போ எல்லாம்...
'இதோ பார் சுனந்தா... உணர்வுகள் வேற; உணர்ச்சிகள் வேற! நமக்கு இடையில இருக்கிற காதல்... மனசு சம்பந்தப்பட்டது; இது, உணர்வு! எனக்கு தேவைப்படுற காமம்... உடல், ஹார்மோன் சம்பந்தப்பட்டது; இது, உணர்ச்சி! நாம மனசுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். உன்னோட காதல் ரொம்பவே அழகானது; எனக்கு, அது போதும்!'னு சொல்வார்.
அந்த தருணத்துல... ஒரு பெண்ணா, ஒரு மனைவியா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கும். பின்னே...
பெண்மையை புரிஞ்சுக்கிற ஆண்மை உயர்வானதுன்னா, அந்த ஆண்மைக்கு தன் அன்பை சரியா உணர்த்துற பெண்மை சிறப்பானதில்லையா!

