புத்தகங்கள் போதிமரம்... வாசித்தால் அது ஞானம் தரும்!
புத்தகங்கள் போதிமரம்... வாசித்தால் அது ஞானம் தரும்!
ADDED : ஜூலை 26, 2020 07:51 PM

''ஒவ்வொரு புத்தகமும் ஒரு போதி மரம்தான். அதை கையில் எடுத்து வாசித்து முடிக்கும் போது, நமக்கு ஞான தரிசனம் கிடைக்கிறது,'' என்கிறார் எழுத்தாளர் நாகா.
கோவை காளப்பட்டி ரோடு சித்ரா பகுதியில் வசித்து வருபவர் நாகச்சந்திரன். டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் இவர், புத்தகங்கள் வாசிப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர்.
தான் வாசிக்கும் புத்தகங்கள் குறித்து, நாகா என்ற பெயரில் விமர்சன கட்டுரைகளை எழுதி வருகிறார்.
புத்தகங்களை பணம் கொடுத்து வாங்கி, அதை முழுமையாக படித்து, ரசித்து அந்த புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள நல்ல கருத்துக்கள், மற்றவர்களுக்கும் போய் சேரும் வகையில், நுால் குறித்த விமர்சனத்தை சுவையாக எழுதி, தனது 'வாட்ஸ் ஆப்' குழுவில் பதிவிட்டு வருகிறார்.
இந்த பதிவுகள், 30க்கும் மேற்பட்ட வாட்ஸ் ஆப் குழுக்களில் பகிரப்பட்டு, வாரம்தோறும், 5000க்கும் அதிகமானவர்களால் படிக்கப்படுகின்றன.
''என் அம்மா புத்தகம் படிப்பதில் ஆர்வம் உள்ளவர். அவரிடம் இருந்துதான் எனக்கு வாசிப்பு பழக்கம் வந்தது. நான் கல்லுாரியில் படிக்கும் காலத்தில் இருந்து புத்தகங்களை வாசித்து வருகிறேன். எந்த புத்தகமாக இருந்தாலும் முழுமையாக படித்து விடுவேன். தினமும் படிக்கும் பழக்கம் உண்டு. உறங்கும் முன் ஒரு மணி நேரம் படிப்பேன். அதிகாலை நேரத்திலும் படிப்பேன்,'' என்கிறார் நாகா.
இவருக்கு, ரயில் பயணங்களின் போதுதான், படிக்க ரொம்ப பிடிக்கும். தான் வாசித்த புத்தகங்கள் குறித்து நண்பர்களிடம் விவாதிக்கிறார். வெறும் உரையாடல் காற்றில் கரைந்து விடும் என்பதால், அதை எழுத்தில் பதிவு செய்து வைத்தால், மற்றவர்களுக்கும் பயன்படும். அதனால் படித்த புத்தகங்கள் குறித்த விமர்சனங்களை எழுத துவங்கியதாக கூறுகிறார் இவர்.
''ஒவ்வொரு புத்தகமும், ஒரு போதி மரம்தான். அதை கையில் எடுத்து, வாசித்து முடிக்கும் போது நமக்கு ஞான தரிசனம் கிடைத்துவிடும்,'' என்கிறார், இந்த புத்தகப் பிரியர்.