ADDED : நவ 14, 2023 03:04 PM

ருத்ரையாவின் 'அவள் அப்படித்தான்' என்ற மகத்தான திரைப்படத்தின் வசனகர்த்தா வண்ணநிலவன். அவருடன் ஒரு குட்டி நேர்காணல்...
மேற்கத்திய உலகின் நவீன இலக்கிய மரபை, மரபு வழிபட்ட தமிழ் இலக்கிய மரபு வரவு வைத்துக் கொண்டது. சாமானியனின் வாழ்க்கை பாடுபொருளானது. இந்த நவீன இலக்கிய மரபு தற்போதைய உலகமய சூழலில் வேறு வடிவம், உள்ளடக்கத்தை கைக்கொள்வதற்கு வாய்ப்பு உள்ளதா
வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே பின் நவீனத்துவம் எழுத்துப் பாணி தமிழுக்கு வந்து வெகுகாலமாகிவிட்டது. தமிழவன் இப்புதுவகை எழுத்தின் முன்னோடி. தற்போது சுரேஷ்குமார
இந்திரஜித் போன்றவர்கள் புதிய கதை சொல்லலை முன்னெடுத்து வருகின்றனர். தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி போன்ற எழுத்தாளர்களின் படைப்பு களில் ஆபாசம் கிடையாது. ஆனால் இக்கால புது எழுத்தில் உடலுறவு காட்சிகளை இடையிடையே திணித்து எழுதுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. இந்த எழுத்துக்களுக்கு இலக்கிய அந்தஸ்தும் வேண்டும் என்கின்றனர். ஆபாசம் ஒருபோதும் இலக்கியமாகாது.
செவ்வியல் (கிளாசிக்) இலக்கிய படைப்பு இதுவரை தமிழில் வெளிவந்துள்ளதாக கருதுகிறீர்களா
நீல.பத்மபநாபனின் 'தலைமுறைகள்', ஹெப்ஸிபா ஜேசுதாசனின் 'புத்தம் புது வீடு', சுந்தரராமசாமியின், 'குழந்தைகள் பெண்கள் ஆண்கள்,' போன்ற வெகுசில நாவல்களே 'கிளாசிக்' என சொல்லத்தக்கவை.
உங்கள் இலக்கியப் பயணத்தின் துவக்க காலத்தில் வாசிப்பு, எழுத்தை ஊக்குவிக்க எழுத்தாளர்
வல்லிக்கண்ணன் உள்ளிட்ட மூத்த படைப்பாளிகள் இருந்தனர். தற்போது இளைய படைப்பாளிகளை அடையாளம் கண்டு ஊக்கம் தருவதற்கான சூழல் உள்ளதா எனக்குத் தெரிந்தவரை என் நண்பர்களான வண்ணதாசன், விக்ரமாதித்யன், கலாப்ரியா போன்றவர்கள் இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கின்றனர்.
சினிமா உலகில் ஏன் தொடர்ந்து பயணிக்கவில்லை
நல்ல ரசிகனாகவே இருக்க விரும்புகிறேன். 'அவள் அப்படித்தான்' திரைப்படத்தில் பங்குபெற்றது தற்செயல் நிகழ்வு. அவர் எனது நண்பர். அதனால் வாய்ப்புக் கொடுத்தார். பாலுமகேந்திராவுடன் இணைந்து பணியாற்ற விரும்பினேன். ஆனால் என் முயற்சி கைகூடவில்லை. வியாபார சினிமா உலகில் இணையும் ஆர்வம் எனக்கு என்றுமே இருந்ததில்லை.
மண் சார்ந்த வாழ்க்கை பற்றிய உங்கள் படைப்புகளில் இதுவரை பதிவு செய்யாமல் எதுவும் விடுபட்டுள்ளதாக கருதுகிறீர்களா
அப்படியெனில் பதிவு செய்வதற்கான முயற்சி எதுவும் உள்ளதா மண் சார்ந்த அல்லது வட்டார வழக்கு நாவல் எழுதும் திட்டம் இல்லை. ஆனால் எனது சமீப காலத்திய எழுத்துக்களில்கூட திருநெல்வேலி வட்டார வழக்கு, அதன் தொனி இடம்பெறுவதைத் தவிர்க்க முடியவில்லை.
உங்கள் படைப்புகளில் வாசகர்கள் நெகிழ்ந்து பாராட்டிய மறக்க முடியாத அனுபவம்
அவரை வாசகர் என கூற முடியாது; பெரிய எழுத்தாளர். அவர் எனக்கு அப்போது அறிமுகம் இல்லை. வண்ணதாசன் தங்கையின் திருமணத்திற்கு வந்திருந்த அந்த எழுத்தாளர் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். நான் ஒரு ஓரத்தில் அமர்ந்து அவர் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தேன். அம்மாத தாமரை பத்திரிகையில் வெளிவந்திருந்த 'யுக தர்மம்' என்ற எனது சிறுகதையைப் பற்றி அவர்களிடம் சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தார்; அவர்தான் கி.ராஜநாராயணன்.
-கருத்துக்கூற 97899 83529.