
நாமக்கல், கொல்லிமலையில் உள்ள திருப்புளிநாடு ஊர் மக்களிடம் துவரபள்ளம் கிராமத்திற்கு வழிகேட்டாலே, 'சரவணக்குமார் தம்பியை பார்க்கப் போறீங்களா' என்கின்றனர்.
'சமூக ஊடகங்கள்தான் எங்கள் வாழ்க்கை' என இளைஞர்கள் மாறிவிட்ட நிலையில், 27 வயது சர வணக்குமாரின் எண்ணம் யாவும் தான் விவசாயம் செய்யும் 13 ஏக்கர் நிலத்தைச் சுற்றியே இருக்கிறது. இதுவே, இவர் மீதான உள்ளூர் மக்களின் மதிப்புக்கு காரணம்!
நிலமும் தாத்தாவும்
பங்காளிகள் கொடுத்த பிரச்னையால இந்த ஊருக்கு இடம்பெயர்ந்து வந்தவர் என் தாத்தா. தோட்டங்கள்ல கூலி வேலை பார்த்தும், மாடு வளர்த்தும் சம்பாதிச்ச காசுல அவர் வாங்கின நிலம் இது. இங்கே விளையுற மலை வாழை, பலா, துவரம் பருப்பை மலைக்கு கீழுள்ள விவசாயிங்ககிட்டே கொடுத்து, நெல் வாங்கிக்கிறது அவரோட விவசாய பாணி!
நிலமும் அப்பாவும்
என் அப்பா அய்யாசாமி பணப்பயிர்களான மிளகு, காபி, அன்னாசி வகைகளை அதிக அளவுல பயிர் பண்ணினார். இதுக்கு மத்தியில வாழை, இஞ்சி, மஞ்சள், கிராம்பு, ஏலக் காய் எல்லாத்தையும் ஊடுபயிராகவும் நடவு பண்ணினார். இதுல கிடைச்ச வருமானத்துல தான் என்னையும், என் மூணு சகோதரர்களையும் உயர்கல்வி வரைக்கும் படிக்க வைச்சார்.
'நிலமும் நானும்' அத்தியாயம் சரவணக்குமார் வாழ்வில் அத்தனை எளிதாக துவங்கிவிடவில்லை. 'உன் தாத்தா என்னை உருவாக்கினார்; உன் தந்தை என்னை உருமாற்றினார்... நீ என்ன செய்யப் போகிறாய்' என்று நிலம் இவரிடம் கேட்டிருக்கிறது.
இவரது பதில்
'தாத்தாவுக்கு அப்புறம் அப்பா பண்ணிட்டிருந்த விவசாயத்தை தொடர்ந்தாலே போதும்'ங்கிற நிலைமை! திட்டமிடல், அறுவடை சிறப்பா இருந்தாலும் இடைத் தரகர்கள் மூலமா சந்தைப் படுத்துறப்போ கிடைக்கிற லாபம் பெருசா இல்லை; அதனால, சந்தைப்படுத்துறதுக்கு மாற்று வழியை தேர்ந்தெடுத்தேன்!
நிலமும் நானும்
மிளகு, அன்னாசி, காபிதான் எங்க நிலத்துல பிரதான பயிர்கள். மேல ஏறி மிளகு கொடி படரணும்னா அதுக்கு சவுக்கு செடி நடவு செய்யணும். மரமா சவுக்கு வளர அஞ்சு வருஷம் காத்திருக்கணும். அதுக்கப்புறம் மிளகு அறுவடைக்கு மூணு வருஷம் ஆகும். எல்லாத்துக்கும் நான் பொறுமையா இருந்தேன்.
சாலையோரமா சின்னதா ஒரு கடை போட்டு எங்க நிலத்துல விளைஞ்சதை விற்பனைக்கு வைச்சேன். கொல்லிமலைக்கு வர்ற சுற்றுலா பயணிகளுக்கு, இயற்கை விவசாயம் தந்த என் விளைபொருட்கள் ரொம்பவே பிடிச்சிருந்தது. இன்னைக்கு, வண்டி யோட வந்து என் பொருட்களை வாடிக்கையாளர்கள் அள்ளிட்டுப் போற அளவுக்கு என் நிலம் எனக்கு அள்ளித் தருது.
என் தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் கைகொடுத்த இந்த நிலம் என்னையும் கைவிடலை.

