PUBLISHED ON : பிப் 15, 2026

நான் தினேஷ் சரவணன்; தன் தம்பிகளை, தங்கையை கரை சேர்க்க ஓடி ஓடி உழைச்ச
அண்ணனை, ஆறிலிருந்து அறுபது வரை படத்துல பார்த்திருப்பீங்க; அந்த நிழலோட
நிஜ வடிவம்... எங்க அண்ணன் சரவணன்.
சொந்த ஊரா ன வேலுார், ரங்காபுரத்துல 25 மாடுகளை வைச்சு பால் வியாபாரம் பண்ணிட்டு இருந்தார். அந்த வருமானத்துல தான் என்னையும், சக்திகுமார் அண்ணனையும், வனிதா அக்கா வையும் பட்டம் வாங்க வைச்சார்.
அம்மா, அப்பா அவரோட கல்யாண பேச்சை எடுத்தாலே, 'முதல்ல தம்பிகளும், தங்கச்சியும் செட்டில் ஆகட்டும் 'ங்கிறதுதான் அவரோட பதிலா இருக்கும்.
அவர் ஆசைப்பட்ட மாதிரியே எங்க மூணுபேர் வாழ்க்கையும் நல்லா அமைஞ்சிருச்சு. ஆனா, அக்கா கல்யாண சந்தோஷத்தை தவிர வேறெதையும் அனுபவிக்கிற கொடுப்பினை அண்ணனுக்கு இல்லை; 2014ம் ஆண்டு சாலை விபத்துல அவர் இறந்துட்டார்.
சரவணனின் மரணம் ஐ.டி., ஊழியரான இந்த தினேஷின் வாழ்க்கை தடத்தில் சில மாற்றங்களை விதைக்கிறது...
சின்ன வயசுல இருந்து சரவணன் அண்ணன் கையில தலை வைச்சுதான் துாங்குவேன்; அவர் மேல எப்பவும் பசும்பால் வாசம் இருக்கும். கசங்கின பனியன், லுங்கியிலேயே சுத்துனவரை அக்காவோட கல்யாணத்துலதான் கட்டாயப்படுத்தி பேன்ட் சட்டை போட வைச்சோம். அன்னைக்கு எடுத்த படம்தான் இது!
அவரோட இறுதி ஊர்வலம் நடந்தப்போதான், ஊர் மக்கள் சொல்லி அவரோட இன்னொரு முகம் எங்களுக்குத் தெரிஞ்சது. வேலுார்ல இருக்குற சில ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லம் போக தாயையோ, தகப்பனையோ இழந்து வாழுற குழந்தைகளுக்கு இலவசமா பால் வழங்கிட்டு இருந்திருக்கார்.
அந்த நிமிஷமே, 'மக்கள் மனசுல அண்ணன் வாழ்ந்துட்டே இருக்கணும்'னு தோணிருச்சு; அவர் செஞ்சு ட்டு இருந்த நல்ல காரியங்களை நான் தொடர்ந்தேன்!
இவற்றோடு சேர்த்து இன்னும் சில நல்ல காரியங்களில் ஈடுபடும் 36 வயது தினேஷ் பாபு, தன்னை பொதுவெளியில் 'தினேஷ் சரவணன்' என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறார்.
மனநிலை பாதிக்கப்பட்டதால கைவிடப்பட்டவர்களை மருத்துவமனையில சேர்க்குறேன். ஏழ்மையும், நோயும் வதைக்கிறவங்களுக்கு முடிஞ்ச உதவிகள் பண்றேன் கடந்த பத்து ஆண்டுகள்ல, 15 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு பண்ணி இருக்கேன். 15 லட்சம் விதைப் பந்துகளோட, இரண்டு லட்சம் பனை விதைகளை விதைச்சிருக்கேன்.
என் மாத வருமானத்துல 50 சதவீதத்தை இதுக்காக ஒதுக்க வேண்டி இருக்கு; 'அதனால என்ன... சந்தோஷமா செய்யுங்க'ன்னு மனைவி சொல்லிட்டாங்க! ம்ம்ம்... இப்போ, சரவணன் அண்ணன் என் கூடத்தான் இருக்குறார் தெரியுமா?
ஆமா... அண்ணனோட பயணப் பட்ட ஏரிக்கரைக்கு இப்போ தனியா போறப்போ, 'அண்ணே... இன்னைக்கு ஒரு வயசான அம்மாவுக்கு உதவ முடிஞ்சது; ஊர் ஏரியில வைச்ச மரங்கள் நல்லா வளருது'ன்னு எனக்குள்ளேயே சொல்லிக்குவேன்; அப்போ, என் முகத்துல காற்று மோதிட்டு போகும்; அது... அவர்தான்னு நான் நம்புறேன்!
'தம்பி... உனக்கு என் அன்பு முத்தங்கள்' - சரவணன்.
