/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
டிரெண்ட்ஸ்
/
காந்தி குறித்த அறியாத் தகவல்களை அறிவோம்!
/
காந்தி குறித்த அறியாத் தகவல்களை அறிவோம்!
UPDATED : அக் 02, 2023 12:26 PM
ADDED : அக் 02, 2023 12:17 PM

இன்று பாரத தேசபிதா மஹாத்மா காந்தியின் 155 ஆவது பிறந்த தினம். இதனையடுத்து நாடு முழுவதும் காங்., கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மத்திய அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தற்போது காந்தி ஹேஷ்டேக் டிரெண்டாகிவரும் நிலையில் காந்தி குறித்து நாம் அறியாத சுவாரஸ்யத் தகவல்களைத் தெரிந்துகொள்வோமா?
அதீத கூச்ச சுபாவம் கொண்டவர் காந்தி. தென்னாப்ரிக்காவில் சட்டப்படிப்பு முடித்த அவர், வழக்கறிஞராக வாதாடும்போது அதீத பயத்துக்குள்ளாகினார். கூட்டத்தின் இடையே உரையாற்றும்போது காந்திக்கு அதீத பதற்றம், படபடப்பு உண்டாகும். இதனால் காந்தி தனது முதல் நீதிமன்ற வாதத்தில் பேசமுடியாமல் திணறினார். பின்னர் வாதாடாமல் தனது இருக்கையில் மெளனமாக அமர்ந்துவிட்டார். அந்த வழக்கை நடத்த முடியாததால் தனது மனுதாரரிடம் வாங்கிய பணத்தை திருப்பித் தந்துவிட்டார்.
![]() |
உடற்பயிற்சியை அடியோடு வெறுத்தார் காந்தி. பின்னாட்களில் இதற்காக வருத்தப்பட்டார். ஆனால் நீண்டதூரம் நடைபயில்வதென்றால் காந்திக்கு அதீத விருப்பம். தனது வாழ்நாள் முழுதும் பலநூறு மைல் தூரம் நடந்து பயணித்துள்ளார்.
காந்தியின் கையெழுத்து படுமோசமாக இருக்கும். அவர் எழுதிய கட்டுரையை அவரே வாசிக்க சிரமப்படுவார். வலது கையால் எழுதி களைப்படைந்துவிட்டால் இடது கையால் எழுதுவார். அவரது இடதுகை எழுத்துகள், வலது கை எழுத்துகளைக் காட்டிலும் ஓரளவு புரியும்படி தெளிவாக இருக்கும்.
![]() |
காந்தி-கஸ்தூரிபாய் திருமணத்தின்போது இருவருக்குமே 13 வயது. இன்னும் சொல்லப்போனால் கஸ்தூரிபாய், காந்தியைவிட சில மாதங்கள் மூத்தவர். தனது தந்தை இரவு தூக்கத்தில் மறைந்தபோது, காந்தி-கஸ்தூரிபாயுடன் தனது படுக்கையறையில் அந்தரங்க உறவில் இருந்தார். தந்தையின் இறப்பின்போது அருகில் இல்லாமல் போய்விட்டோமே என தனது வாழ்நாள் முழுதும் ஏங்கினார் காந்தி. வாழ்வின் இரண்டாம் பாதியில் உடலுறவே கூடாது என கஸ்தூரிபாயிடம் கூறி, தனது தாம்பத்திய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் காந்தி.
13 வயதில் திருமணமாகிய காந்தி, தனது 16 வது வயதிலேயே தந்தையானார். அவரது முதல் குழந்தை பிறந்ததும் நோய்வாய்ப்பட்டு இறந்தது. இதனையடுத்து ஹரிலால், மணிலால், ராம்தாஸ், தேவதாஸ் என நான்கு ஆண் குழந்தைகளுக்குத் தந்தையானார்.
![]() |
1921 ஆம் ஆண்டு அந்நிய நாட்டு ஆடைகளைத் தவிர்த்து வெண்நிற காதி உடையை அணிந்தார் காந்தி. உடை மூலம் உலக கவனம் பெற்ற தலைவர் என்றால் அது காந்திதான். மேலும் தன்னைப் போலவே காதி உடை அணிய இந்தியர்களை வலியுறுத்தினார்.
தென்னாப்ரிக்காவில் சமூக ஆர்வலராக இருந்த காந்தி, ஒரே ஒருமுறை பிரிட்டிஷ் படைக்கு ஆதரவாகக் குரல்கொடுத்தார். 1899 ஆம் ஆண்டு நடந்த போயர் போரின்போது பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற உதவினார்.
பிரபல ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய், காந்தியுடன் நெருங்கிய நட்பில் இருந்தவர். அஹிம்சைமீது ஆர்வம் கொண்ட இருவரும் கடிதப் போக்குவரத்தின் மூலம் நெருங்கிய நண்பர்களாகினர். டால்ஸ்டாய் தனது வாழ்வின் இறுதி காலத்தில் அதிகமாக கடிதம் எழுதியது காந்திக்கு மட்டுமே.
![]() |
காந்தி-ராஜாஜி இருவரும் சம்பந்தி என்பது பலரும் அறியாத விஷயம். முன்னாள் மதராஸ் மாநில முதல்வர், மேற்கு வங்க ஆளுநர், மத்திய யூனியன் அமைச்சரான ராஜகோபாலச்சாரியின் மகள் லக்ஷ்மியைக் காதலித்தார் காந்தியின் கடைசி மகன் தேவதாஸ். லக்ஷ்மிக்கு அப்போது 15 வயது. காந்தி, ராஜகோபாலச்சாரியின் அறிவுரைப்படி தேவதாஸ்-லக்ஷ்மி காதல் ஜோடி, தங்கள் திருமணத்துக்காக ஐந்தாண்டுகள் காத்திருந்தனர். இந்த ஐந்து ஆண்டுகளில் இருவரும் சந்திக்கக்கூடாது என காந்தி, மகனுக்கு அறிவுறுத்தி இருந்தார். தந்தையின் அறிவுரையைப் பின்பற்றிய தேவதாஸ், தனது 33 ஆவது வயதில் லக்ஷ்மியைக் கரம்பிடித்தார்.
காந்திக்கு அவரது வாழ்நாளில் அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்படவேயில்லை. 1937 ஆம் ஆண்டு நோபல் பரிசு கமிட்டி காந்தியின் பெயரைப் பரிசீலித்தது. காந்தி அஹிம்சாவாதியாக இருந்தாலும் அவரது ஆதரவாளர்கள் வன்முறையைத் தூண்டுவதால் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கக்கூடாது என சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். 1947 ஆம் ஆண்டும் காந்தியின் பெயரை கமிட்டியினர் நிராகரித்தனர். 1948 ஆம் ஆண்டு காந்தி கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
![]() |
காந்தியின் கொள்ளுப்பேத்தி லீலா காந்தி (57) ஓர் ஆங்கில மற்றும் தத்துவப் பேராசிரியராவார். இவர் 1998 ஆம் ஆண்டு எழுதிய போஸ்ட் கொலோனியல் தியரி, ஏ கிரிட்டிகல் இண்ட்ரொடக்ஷன் (Postcolonial Theory: A Critical Introduction) என்கிற புத்தகம், காலனி ஆதிக்கத்தின் சாதக பாதகங்கள், மார்க்ஸியம், பெண்ணியம் குறித்துப் பேசி, உலக கவனம் பெற்றது.