சர்வதேச மல்யுத்த போட்டியில் பதக்கம் வென்ற விக்ரம்
சர்வதேச மல்யுத்த போட்டியில் பதக்கம் வென்ற விக்ரம்
ADDED : ஜன 30, 2026 06:29 AM

- நமது நிருபர் -:
ஹூப்பள்ளி மாவட்டம், உன்கல் கிராமத்தை சேர்ந்தவர் விக்ரம், 17; மல்யுத்த வீரர். இரண்டாம் ஆண்டு பி.யு., மாணவர். இவர், சிறுவயதில் இருந்தே மல்யுத்த போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இவர் தனது கிராமத்தில் உள்ள வாயுபுத்ரா ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷனில் பயிற்சி பெற்று உள்ளார். மாவட்டம், மாநில அளவிலான போட்டிகளில் தொடர்ச்சியாக பங்கேற்று பதக்கங்களை பெற்று வருகிறார்.
இதன் காரணமாக, கடந்த ஆண்டு அக்டோபரில் பெலகாவியில் நடந்த மிஷன் ஒலிம்பிக் கேம்ஸ் அசோசியேஷ்ன் ஏற்பாடு செய்த மல்யுத்த போட்டியில் பங்கேற்றார். இந்த போட்டி தேசிய அளவிலான போட்டியாக நடந்தது. இதில், பங்கேற்க நுாற்றுக்கணக்கான வீரர்கள் பல மாநிலங்களில் இருந்து வருகை தந்தனர்.
மகிழ்ச்சி இதில், விக்ரம் 61 கிலோ எடை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பங்கேற்றார். தனது பிரிவில் பங்கேற்ற 10க்கும் மேற்பட்ட வீரர்களை பந்தாடி தங்க பதக்கத்தை வென்றார்.
இது, நடுவர்கள், போட்டியை நடத்துவோரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், சர்வதேச அளவிலான மல்யுத்த போட்டிகளில் நம் நாட்டின் சார்பாக விளையாடுவதற்கு விக்ரம் தேர்வு செய்யப்பட்டார்.
இதன்படி, கடந்த ஆண்டு டிசம்பரில் தாய்லாந்தில் நடந்த சர்வதேச அளவிலான மல்யுத்த போட்டியில் விக்ரம் நம் நாட்டின் சார்பாக பங்கேற்றார். இதில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் 61 கிலோ எடை பிரிவில் பங்கேற்றார். மூன்று போட்டியாளர்களை தோற்கடித்து இறுதி போட்டிக்குள் நுழைந்தார்.
எதிர்பாராத விதமாக, இறுதி போட்டியில் போராடி தோல்வியை தழுவினார். தோல்வி அடைந்தாலும், அவரின் ஆட்டத்தை பலரும் ரசித்தனர். தோற்றாலும் இறுதி வரை போராடிய விக்ரமை பாராட்டினர். இதில், வெள்ளி பதக்கம் வென்றார்.
நெகிழ்ச்சி இது குறித்து, விக்ரமின் தந்தை மஞ்சுநாத் கூறியதாவது:
என் மகனின் சாதனையைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வீட்டிலேயே பயிற்சி செய்து இந்த நிலைக்கு அவர் வளர்ந்திருப்பது பெரிய விஷயம். மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேச அளவிலான மல்யுத்தப் போட்டிகளில் விருதுகளை பெற்று உள்ளார். நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
எதிர்காலத்தில் எனது மகன் ஒலிம்பிக்கில் விளையாட வேண்டும் என்பதே எனது ஆசை. அங்கு விளையாடி நாட்டிற்கும், மாநிலத்திற்கும் பெருமை சேர்க்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

