ADDED : மே 24, 2026 11:20 PM

-நமது நிருபர் -:
கர்நாடகாவில் பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், 'அக்கா படை' துவங்கப்பட்டது. ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவுவது, குழந்தை திருமணங்களை தடுப்பது போன்ற வேலைகளை, அக்கா படை சாதுரியமாக செய்கிறது. இது, கர்நாடக போலீஸ் துறையின் அதிகாரப்பூர்வ அமைப்பாகும். இப்படைக்கு பெண்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.
இந்த அக்கா படை முதன் முதலில், 2023 செப்டம்பர் மாதம் பீதரில் சோதனை முயற்சியாக துவங்கப்பட்டது. அக்கா படையின் வாகனம் கல்வி நிறுவனங்கள், பொது இடங்கள், பெண்கள் விடுதிகள் பகுதிகளில் அதிகம் ரோந்து வந்தது.
இது, பெண்களுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியது. இதனால், அக்கா படைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
செயல்பாடு இதையடுத்து, அக்கா படை, 2025ம் ஆண்டின் இறுதியில் மாண்டியா மாவட்டத்திலும் விரிவுபடுத்தப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்த முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை, கடந்த ஜனவரியில் ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து, கடந்த பிப்ரவரியில் அனைத்து மாவட்டங்களிலும் அக்கா படை விரிவுபடுத்தப்பட்டது.
அக்கா படையில் ஒரு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையின் கீழ், நான்கு பெண் ஊர்காவல் படையினர் அல்லது போலீஸ் ஏட்டுகள் இருப்பர். இவர்கள் 'பிங்க்' நிற காரில் ரோந்து செல்வதை வாடிக்கையாக வைத்திருப்பர். இவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்துவர். அச்சமயத்தில், என்.சி.சி., மாணவியரும் அக்கா படையுடன் இணைந்து பணியாற்றுவர்.
அக்கா படையின் 'ஸ்பெஷாலிட்டி' என சொல்லப்படுவது 'சீக்ரெட்' ரோந்து. அதாவது கல்லுாரி, பகுதிகளில் உள்ள சந்துகளில், அக்கா படையினர் சிவில் உடையில் ஸ்கூட்டரில் கல்லுாரி பெண் போலவே பயணிப்பர். மேலும், கல்லுாரிக்கு முன்புள்ள பஸ் நிறுத்தங்களிலும் சிவில் உடையில் சாதாரணமாக இருப்பர்.
அப்போது, பெண்களிடம் தவறாக நடக்க முயற்சிக்கும் நபர்களுக்கு தர்ம அடி கொடுப்பர். இவர்களுக்கு கைது செய்யும் அதிகாரமும் உண்டு.
கிராம்பபுற பகுதிகளில் நடக்கும் குழந்தை திருமணங்களை தடுப்பதை முதன்மையான வேலையாக, இந்த பெண்கள் படையினர் வைத்து உள்ளனர். குறிப்பாக, பெலகாவி, ராய்ச்சூர் போன்ற மாவட்டங்களில் குழந்தை திருமணங்களை தடுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
