/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
தங்கவயலுக்கு பெருமை சேர்த்த சிறுதானியம்
/
தங்கவயலுக்கு பெருமை சேர்த்த சிறுதானியம்
ADDED : செப் 01, 2025 03:59 AM

சிறுதானிய வளர்ச்சியில் சர்வதேச புகழ் பெற்றவர் தங்கவயலின் இளம் பெண் மார்கரெட், 38. இவர் பிறந்து, வளர்ந்தது, எல்லாமே ராபர்ட்சன்பேட்டையில் தான். 'மாதா பிளைவுட்ஸ்' வெங்கடேஷின் மகளான இவர், இளங்கலை படிப்பை தங்கவயலிலும், முதுகலை படிப்பை சென்னை அண்ணா பல்கலையிலும் படித்தவர். 2015ல் ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதிய போது சிறு தானியம் பற்றிய விபரங்களை அறிந்து அதில் சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு ஏற்பட்டது.
தங்கவயலில், 8 ஏக்கரில் சிறுதானிய விவசாயத்தில் ஈடுபட்டார். 2017ல், தாசரஹொசஹள்ளி என்ற இடத்தில் சிறுதானியங்கள் தயாரிக்க 'இசாயா புட் இண்டஸ்ட்ரி' என்ற தொழிற்சாலையை ஏற்படுத்தினார். இங்கு வரகு, சாமை, தினை, கேழ்வரகு, சோளம், குதிரைவாலி நெல் பயிரிட்டார். விளைச்சலுக்கு பின், அவைகளை தனி பாக்கெட்டில் அடைத்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறார். இந்தியாவிலும் முக்கிய இடங்களுக்கு சப்ளை செய்கிறார்.
இந்திய பிரதிநிதி இந்த நிலையில் டில்லியில் நடந்த 'ஜி- -20' மாநாட்டில், சிறுதானியம் குறித்து விளக்க உரை, செய்முறை செய்யுமாறு மத்திய அரசு பரிந்துரைத்தது. இந்தியாவிலிருந்து இவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார். சிறுதானிய மகத்துவம் பற்றி உலக நாட்டின் பிரதிநிதிகள் அறிய செய்தார். ஒரு சமையலறையை ஏற்படுத்தி, திறமையான சமையல் நிபுணர்கள் மூலம் சமைக்க வைத்து நேரடியாக விளக்கினார். இது பற்றி அவர் கூறியதாவது:
தங்கவயலில் பிறந்த எனக்கு, சிறு தானியம் பெரிய அங்கீகாரத்தை தேடி கொடுத்தது. எனது தொழிற்சாலையில், ஆரம்பத்தில் நாள்தோறும் 500 கிலோ வரை உற்பத்தி செய்தோம். தற்போது மாதந்தோறும் 50 டன்னாக அதிகரித்து உள்ளது. இதற்காக 40 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்து உள்ளது. கலப்படமற்ற தானியங்கள் தயாரிக்க நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கர்நாடக புகழ் எங்கள் தயாரிப்பில் உள்ள வரகு, பாலீஷ் செய்யப்படாமல் மஞ்சள் நிறத்தில் தான் இருக்கும். ஆனால் மார்க்கெட்களில் பளபளப்புடன் வெள்ளையாக காணப்படும். சோளம்- கருப்பு, வெள்ளை என இரு வகைகள் உள்ளன. ஆரம்பத்தில் இவற்றை சாப்பிட கஷ்டமாக இருக்கும். முதலில் உப்புமா செய்து சாப்பிடலாம். நமக்கு பிடித்த பின், பல்வேறு வகைகளில் சமைத்து சாப்பிடலாம். தற்போது, சிறுதானியங்களின் பயன் குறித்து பலரும் அறிந்து வருகின்றனர். கர்நாடகாவின் புகழை பரப்ப எனக்கு வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் - .