பாக்., தளபதியிடம் சர்ச்சைக்குரிய வரைபடம் தந்த யூனுாஸ்; வாலாட்டுகிறது வங்கதேசம்
பாக்., தளபதியிடம் சர்ச்சைக்குரிய வரைபடம் தந்த யூனுாஸ்; வாலாட்டுகிறது வங்கதேசம்
ADDED : அக் 27, 2025 06:12 PM

டாக்கா: இந்திய மாநிலங்களை உள்ளடக்கிய தங்கள் நாட்டின் சர்ச்சைக்குரிய வரைபடத்தை, பாகிஸ்தான் தளபதியிடம் வங்கதேச இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் கொடுத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமராக ஷேக் ஹசீனா இருந்தவரை இந்தியாவுடன் அவர் நெருங்கிய நட்புறவை வளர்த்தார். இதனால் பாகிஸ்தான் வங்கதேசத்திடம் இருந்து விலகி இருந்தது. அதன் பின் எந்தவித இருதரப்பு பயணமும் நடக்கவில்லை. கடந்த 2024ல் நடந்த மாணவர் போராட்டத்தால் ஷேக் ஹசீனா பதவியை இழந்தார்.
வங்கதேசத்தில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து வங்கதேச அரசின் இடைக்கால ஆலோசகராக முகமது யூனுஸ் பதவியேற்றார். அவரது அரசில் இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக அங்கு சிறுபான்மை ஹிந்துக்களுக்கு எதிராக தக்குதல்கள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தானுடனான வங்கதேசத்தின் உறவும் வலுவடைந்து வருகிறது. பாகிஸ்தான் தலைவர்கள் வங்கதேசத்திற்கு செல்வதும், வங்கதேச தலைவர்கள் பாகிஸ்தான் செல்வதும் நடக்கத்தான் செய்கிறது.
அந்த வகையில் பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த தளபதி ஷாஹிர் ஷம்சாத் மிர்சா வங்கதேசம் சென்றுள்ளார். டாக்காவில் அவர், முகமது யூனுஸை சந்தித்து ஆலோசனை நடத்தினார். சந்திப்பின் போது, புத்தகம் ஒன்றை அவருக்கு பரிசாக அளித்தார். அந்த புத்தகத்தின் முகப்பில் உள்ள வரைபடம் தான் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.
அந்த வரைபடத்தில் வங்கதேச நாட்டுடன், இந்தியாவுக்கு சொந்தமான வடகிழக்கு மாநிலங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த புகைப்படத்தை முகமது யூனுஸ் தனது சமூக வலைதள பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து இந்திய நெட்டிசன்கள் முகமது யூனுசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

