ADDED : மார் 03, 2026 02:44 AM

வாஷிங்டன், ஈரானுடனான மோதல் நான்கு வாரங்கள் நீடிக்கும் எனவும், ராணுவ நடவடிக்கை திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல், ஒரு சில நாட்களில் முடியக்கூடியது அல்ல என்றும், இது ஒரு நீண்ட கால திட்டமிடப்பட்ட நடவடிக்கை என்றும், அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் ஒரு பெரிய நாடு என்பதால், அதன் தற்காப்பு அரண்களை உடைக்க, ராணுவ நடவடிக்கைகள், குறைந்தது நான்கு வாரங்கள் அல்லது அதற்கும் சற்று குறைவான கால அளவு நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
போர் நடவடிக்கைகள் திட்டமிட்டபடியே நடந்து வருகின்றன. ஈரானின் உயர்நிலை தலைவர்கள் உட்பட, 48 முக்கிய பிரமுகர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இது அமெரிக்கா எதிர்பார்த்ததை விட பெரிய வெற்றியாகும். இம்மோதலில், முதல்முறையாக மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள், உண்மையான தேசபக்தர்கள். இத்தகைய சிக்கலான போர்களில், இதுபோன்ற உயிரிழப்புகள் தவிர்க்க முடியாதவை.
இவ்வளவு பெரிய தாக்குதலுக்கு இடையிலும், ஈரானுடன் பேச்சு நடத்த, அமெரிக்கா தயாராக இருக்கிறது. ஈரான் தலைவர்கள் பேச விரும்பினர்; ஆனால், உரிய நேரத்தில் அவர்கள் பேசவில்லை. ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை, உலகம் கண்டிராத மிகப்பெரிய மற்றும் சிக்கலான தாக்குதல். ஈரானின் அணுஆயுத அச்சுறுத்தல் மற்றும் நீண்ட துார ஏவுகணைகளை அழிப்பதே, இதன் முக்கிய நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.

