அவசர சிகிச்சைப்பிரிவில் ரணில் விக்கிரமசிங்கே 'அட்மிட்'
அவசர சிகிச்சைப்பிரிவில் ரணில் விக்கிரமசிங்கே 'அட்மிட்'
ADDED : ஆக 23, 2025 07:17 PM

கொழும்பு: அரசு நிதி முறைகேடு வழக்கில், கைது செய்யப்பட்ட இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, 76. பல்லாண்டு காலம் அந்த நாட்டு அரசியலில் இருக்கிறார். அந்த நாட்டின் பிரதமராகவும், அதிபராகவும் பதவி வகித்தவர். இலங்கை பொருளாதார ரீதியாக திவால் நிலையை அடைந்தபோது, அதிபராக பொறுப்பேற்று மீண்டும் நிலைமையை சீர்படுத்தியவர்.
ரணில் அதிபராக இருந்தபோது 2023ல் அவரது மனைவி மைத்ரி, லண்டன் பல்கலையில் பட்டம் பெற்றார். இதையொட்டி, ரணில், அவரது மனைவி உள்ளிட்ட 10 பேர் லண்டன் பயணம் மேற்கொண்டார்.
இப்பயணத்திற்காக அரசு நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டுக்கு ஆளான ரணில் விக்கிரமசிங்கே நேற்று குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டது. சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கிருந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் ஐ.சி.யு. எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இலங்கையில், முன்னாள் அதிபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்பட்டதில்லை. தற்போது தான் முதல் முறையாக முன்னாள் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், ரணிலை அரசியலில் இருந்து வெளியேற்றும் நோக்கத்துடன் இந்த செயலில் அரசு ஈடுபட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.