மலேசியாவில் ஆசியான் உச்சிமாநாடு; காணொலி காட்சியில் பங்கேற்கிறார் மோடி
மலேசியாவில் ஆசியான் உச்சிமாநாடு; காணொலி காட்சியில் பங்கேற்கிறார் மோடி
ADDED : அக் 23, 2025 10:56 AM

புதுடில்லி: மலேசியாவில் அக்டோபர் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கும் ஆசியான் கூட்டமைப்பின் மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வரும் அக் 26ம் தேதி முதல் அக் 28ம் தேதி வரை ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடுகள் நடைபெற உள்ளன. இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தகப் பதற்றம் நீடித்து வரும் நிலையில் இந்த மாநாடுகள் நடக்கின்றன. இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.
இந்நிலையில் இன்று ஆசியான் உச்சிமாநாடு தொடர்பாக பிரதமர் மோடி மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ''எனது அன்பு நண்பர் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் தொலை பேசியில் பேசினேன்.
மலேசியாவின் ஆசியான் தலைமைத்துவத்துக்கும், உச்சிமாநாடு வெற்றி பெறவும் வாழ்த்தினேன். ஆசியான் கூட்டமைப்பின் மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பல நாடுகளின் தலைவர்களை மலேசியா அழைத்துள்ளது. அதிபர் டிரம்ப் அக்டோபர் 26ம் தேதி கோலாலம்பூருக்கு இரண்டு நாள் பயணமாக பயணம் செய்ய உள்ளார்.
ஆசியான் கூட்டமைப்பில் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர் மற்றும் கம்போடியா ஆகிய 10 உறுப்பு நாடுகள் இடம் பெற்றுள்ளன.