தண்ணீர் திறந்து விடக்கோரி இந்தியாவிடம் பாக்., கெஞ்சல்
தண்ணீர் திறந்து விடக்கோரி இந்தியாவிடம் பாக்., கெஞ்சல்
UPDATED : ஆக 12, 2025 10:37 PM
ADDED : ஆக 12, 2025 10:34 PM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவ தளபதி, அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலவல் புட்டோ ஆகியோர் சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடர்பாக போர் மிரட்டல் விடுத்த நிலையில், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் சிந்து, ஜீலம், செனாப் நதிகளில் இருந்து நீரை வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், கடந்த ஏப்ரல் 22ல் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை மூலம், பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை நம் படைகள் அழித்தன. அதற்கு முன் உடனடி நடவடிக்கையாக, பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது. பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுக்கும் வகையில் சிந்து நதி குறுக்கே அணை கட்ட முடிவு செய்துள்ளது.
சிந்து நதிநீர் ஒப்பந்தம், இந்தியா - பாகிஸ்தான் இடையே 1960ல் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் ஆறு நதிகளை உள்ளடக்கியது. அவை கிழக்கு நதிகள் மற்றும் மேற்கு நதிகள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.கிழக்கு நதிகளில் சட்லஜ், பியாஸ், ராவி ஆகியவை உள்ளன. இந்த மூன்று நதிகளின் நீரின் உரிமையும் முழுமையாக இந்தியா வசம் உள்ளது. மேற்கு நதிகளில் சிந்து, ஜீலம், செனாப் உள்ளன. சிந்து நதி ஒப்பந்தத்தின்படி, 80 சதவீத நீர் பாகிஸ்தானுக்கு கிடைத்து வந்தது.
மேற்கு நதிகளின் நீரை நம்பி தான் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் உள்ளது. லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள், குடிநீர் ஆகியவற்றுக்கு சிந்து, செனாப், ஜீலம் நதிகளின் நீரை அந்நாடு பயன்படுத்தி வந்தது. தற்போது இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், பாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்லவில்லை. மேலும், இந்தியா புதிய அணை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், 'அணை கட்டினால் தகர்ப்போம்' என நேற்று முன்தினம் பேசியிருந்தார். இதே போல் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும், அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான பிலவல் புட்டோவும், 'சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மாற்ற முயற்சித்தால், எங்களுக்கு போரை தவிர வேறு வழியில்லை' என, மிரட்டல் விடுத்தார்.
இந்நிலையில், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தண்ணீர் திறந்து விடும்படி கோரிக்கை வைத்துள்ளது.இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வரும்படி இந்திய அரசுக்கு வலியுறுத்துகிறோம்.சிந்து, செனாப், ஜீலம் ஆகிய மேற்கு நதிகளின் கீழ் பகுதியில் பாகிஸ்தான் இருப்பதால், அந்த நதிகளில் எங்களுக்கே உரிமை அதிகம் என சர்வதேச மத்தியஸ்த நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், இந்த நதியில், நீர்மின் திட்டங்களை ஒருதலைப்பட்சமாக செயல்படுத்தக் கூடாது என்றும், சர்வதேச மத்தியஸ்த நீதிமன்றம், ஆகஸ்ட் 8ல் கூறியுள்ளது.
பாகிஸ்தான் பகுதிகளுக்கு நீர் பாய இந்தியா அனுமதிக்க வேண்டும் என, மத்தியஸ்த நீதிமன்றம் கூறியுள்ளது. அதன்படி நீரை திறக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா எப்போதும், சர்வதேச மத்தியஸ்த நீதிமன்றத்தின் வழக்கு நடைமுறைகளையோ அல்லது தீர்ப்புகளையோ அங்கீகரித்ததில்லை.