மும்பை தாக்குதல், பார்லி தாக்குதலுக்கு காரணம் மசூத் அசார்: ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாதி வாக்குமூலம்
மும்பை தாக்குதல், பார்லி தாக்குதலுக்கு காரணம் மசூத் அசார்: ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாதி வாக்குமூலம்
ADDED : செப் 17, 2025 04:57 PM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பாலகோட் பயங்கரவாத முகாமில் இருந்து ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைவனான மசூத் அசார், மும்பை மற்றும் பார்லிமென்ட் தாக்குதலுக்கு திட்டமிட்டான், ' என அந்த அமைப்பின் தளபதியான மசூத் இலியாஸ் காஷ்மீரி கூறியுள்ளான். இதனால், இந்த தாக்குதல்களில் எந்த தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் பொய் கூறியுள்ளது அம்பலமாகியுள்ளது.
2001 ம் ஆண்டு டிச.,13ம் தேதி பார்லிமென்டில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாதிகள் 5 பேர் தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்புப் படையை சேர்ந்த 8 பேர் வீரமரணம் அடைந்தனர். தோட்டக்காரர் ஒருவரும் உயிரிழந்தார். பாதுகாப்பு படையினர் பதிலடியில் பயங்கரவாதிகள் 5 பேரும் கொல்லப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து 2008 ம் ஆண்டு நவ., 26 ல் மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த இரண்டு சம்பவங்களிலும் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருக்கு தொடர்புள்ளது என இந்தியா ஆதாரத்துடன் குற்றம்சாட்டியது. ஆனால் இதனை பாகிஸ்தான் மறுத்துள்ளது. தங்களது மண்ணில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுக்கவில்லை எனத் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், அந்த பயங்கரவாத அமைப்பின் தளபதியான மசூத் இலியாஸ் காஷ்மீரி பேசிய மற்றொரு வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
அதில் அவன், ' திஹார் சிறையில் இருந்து தப்பிய பிறகு, மசூத் அசார் பாகிஸ்தானுக்கு வந்தான். பாகிஸ்தானில் உள்ள பாலகோட் அவனுக்கு தளமாக இருந்தது. இங்கிருந்து தான் டில்லி மற்றும் மும்பை தாக்குதலுக்கான திட்டங்கள் தயாரித்து செயல்படுத்தினான்,' எனக்கூறியுள்ளான்.
இந்த பாலகோட் பயங்கரவாத முகாம் மீது கடந்த 2019ம் ஆண்டு இந்திய விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தியிருந்தது.
பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து புகலிடம் அளித்து வருகிறது என்ற இந்தியாவின் குற்றச்சாட்டை நிரூபிப்பது போல் பயங்கரவாதியின் பேச்சு அமைந்துள்ளது. இதுவரை மறுப்பு தெரிவித்துவந்த பாகிஸ்தானுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.