கையை இழந்த இந்தியர்; 2 ஆண்டுகளுக்கு விசாவை நீட்டித்த ஆஸ்திரேலியா
கையை இழந்த இந்தியர்; 2 ஆண்டுகளுக்கு விசாவை நீட்டித்த ஆஸ்திரேலியா
ADDED : ஆக 18, 2025 10:22 AM

விக்டோரியா: ஆஸ்திரேலியாவில் 5 பேர் கொண்ட கும்பல் நடத்திய தாக்குதலில் இந்திய இளைஞர் கையை இழந்த நிலையில், அவருக்கு மேலும் 2 ஆண்டுகள் விசாவை நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் விக்டோரியாவில் உள்ள அல்டோனா மீடோவில் உள்ள ஷாப்பிங் மையத்தில் இந்தியாவைச் சேர்ந்த சவுரவ் ஆனந்த் என்பவர் மீது 5 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கியுள்ளது. அரிவாளால் வெட்டியதில் சவுரவ் ஆனந்தின் கையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
மருத்துவமனையில் சவுரவ் ஆனந்த் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருடைய விசா காலம் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைகிறது.
இந்த நிலையில், மருத்துவ சிகிச்சை மற்றும் வழக்கை நடத்துவதற்கு வசதியாக, சவுரவ் ஆனந்தின் விசாவை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து ஆஸ்திரேலிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து சவுரவ் ஆனந்த் கூறுகையில், 'என் வாழ்க்கையின் மிக பயங்கரமான நேரத்தில், அரசும், சமூகமும் ஒன்றிணைந்து எனக்கு ஆதரவாக நின்றுள்ளனர். இது எனக்கு ஆறுதல் அளிக்கிறது,' என்றார்.