எலான் மஸ்க் முன்னேற வேண்டும்: மிரட்டல் விடுத்த டிரம்ப் நிலைப்பாட்டில் மாற்றம்
எலான் மஸ்க் முன்னேற வேண்டும்: மிரட்டல் விடுத்த டிரம்ப் நிலைப்பாட்டில் மாற்றம்
ADDED : ஜூலை 24, 2025 10:29 PM

வாஷிங்டன்: ''தொழிலதிபர் எலான் மஸ்க்கும் அவரது நிறுவனமும் செழிக்க வேண்டும்'', என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் அரசின் செலவை குறைக்கவும், திறனை மேம்படுத்தவும் சிறப்பு துறை உருவாக்கப்பட்டது.இதன் தலைவராக தொழிலதிபர் எலான் மஸ்க் இருந்தார். இவருக்கும் டிரம்ப் அமைச்சரவையைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது.இதனால், சமீபத்தில் அரசு துறை தலைவர் பதவியிலிருந்து மஸ்க் விலகினார். இதைத்தொடர்ந்து அமெரிக்காவின் செனட் சபையில் புதிய செலவு மற்றும் வரி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்தார்.இதனால் கோபமடைந்த அதிபர் டிரம்ப், எலான் மஸ்க் நிறுவனத்திற்கு தரப்படும் அரசு ஒப்பந்தங்கள் மற்றும் மானியங்களை நிறுத்தப்போவதாக மிரட்டல் விடுத்தார்.
இந்நிலையில் டிரம்ப்பின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அமெரிக்க அரசிடம் இருந்து எலான் மஸ்க் பெறும் பெரிய அளவிலான மானியம் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அவரது நிறுவனங்களை நான் அழிப்பேன் என்று அனைவரும் கூறுகின்றனர். ஆனால், அப்படியல்ல. எலான் மஸ்க்கும், நம் நாட்டில் உள்ள அனைத்து வணிகங்களும் உண்மையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு செழிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
அவர்கள் சிறப்பாக செயல்படும்போது, அமெரிக்காவும் சிறப்பாக செயல்படும். அது நம் அனைவருக்கும் நல்லது. நாங்கள் ஒவ்வொரு நாளும் சாதனைகளை படைத்து வருகிறோம். அதை அப்படியே வைத்திருக்க விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.