ஆளுங் கட்சியினருக்கு 'சம்மன்' அனுப்ப மாட்டீர்களா: போலீசாருக்கு கண்டனம்
ஆளுங் கட்சியினருக்கு 'சம்மன்' அனுப்ப மாட்டீர்களா: போலீசாருக்கு கண்டனம்
ADDED : ஜூலை 22, 2025 04:51 AM

சென்னை: 'மதபோதகர் தாக்கப்பட்ட வழக்கில், தி.மு.க., முன்னாள் எம்.பி., ஞானதிரவியத்திற்கு ஆறு மாதங்களாக, 'சம்மன்' வழங்காதது ஏன்' என, கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், போலீசாருக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சி.எஸ்.ஐ., திருமண்டல அலுவலகம் அருகே, இட்டேரி பகுதியைச் சேர்ந்த மதபோதகர் காட்ப்ரே வாஷிங்டன் நோபல் என்பவரை, கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி, ஞானதிரவியம் ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
மதபோதகர் அளித்த புகார் அடிப்படையில், ஞானதிரவியம் உள்பட 33 பேர் மீது, பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் விசாரணையை விரைந்து முடிக்க, திருநெல்வேலி நீதிமன்றத்திற்கு உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றத்தில் மதபோதகர் காட்ப்ரே வாஷிங்டன் நோபல் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஞானதிரவியத்துக்கு எதிரான வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க, திருநெல்வேலி நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதி பி.வேல்முருகன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப் போது, உயர் நீதிமன்ற பதிவு துறை தரப்பில், ஞானதிரவியத்துக்கு எதிரான வழக்கு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதை பார்வையிட்ட நீதிபதி கூறியதாவது:
ஆவணங்களை பார்த்தபோது, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தான், ஞானதிரவியத்திற்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிகிறது. வழக்கு பதிவு செய்யப்பட்ட பின், ஆறு மாதங்களாக, போலீசார் சம்மன் வழங்காதது ஏன்; ஆளும்கட்சியை சேர்ந்தவர், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களாக இருந்தால், சம்மன் வழங்க மாட்டீர்களா?
மேலும், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக, சம்மன் வழங்க இயலாது என, தெரிவித்து விட்டால், சம்மன் அனுப்ப தனி பிரிவை உருவாக்க நேரிடும். இல்லையெனில், இது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்திற்கு அறிக்கை அனுப்பப்படும். இவ்வாறு நீதிபதி எச்சரித்தார்.
பின், இந்த வழக்கின் விசாரணையை, வரும் 28ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, முன்னாள் எம்.பி., ஞானதிரவியத்துக்கு சம்மன் அனுப்பியது குறித்தும், அவருக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

