திமுக கொள்ளையடித்த பணத்தை மீட்டு மக்களுக்கு கொடுப்போம்: பிரதமர் மோடி உறுதி
திமுக கொள்ளையடித்த பணத்தை மீட்டு மக்களுக்கு கொடுப்போம்: பிரதமர் மோடி உறுதி
UPDATED : மார் 04, 2024 09:18 PM
ADDED : மார் 04, 2024 06:49 PM

சென்னை: ''மத்திய அரசு திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக செல்வதால் அதில் கொள்ளையடிக்க முடியாமல் திமுக வருந்துகிறது. தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு அளிக்கப்படும் பணத்தை கொள்ளையடிக்க விடமாட்டேன்''. கொள்ளையடித்த பணத்தை மீட்ப்பேன் என பிரதமர் மோடி உறுதியளித்தார்.
தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தார். கல்பாக்கத்தில் அதிவேக ஈனுலை மின்உற்பத்தி திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக நந்தனம் வந்த மோடி, பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அவருக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சிறுத்தை படம் பொறிக்கப்பட்ட காஞ்சி பட்டு சால்வை அணிவித்தார். இதனைத்தொடர்ந்து பனைத் தொழிலாளர்கள் பிரதமருக்கு நினைவுப் பரிசு வழங்கினர்.
பொதுக்கூட்டத்தில் 'வணக்கம் சென்னை' என தமிழில் கூறி பிரதமர் மோடி பேசியதாவது: ஒவ்வொரு முறை நான் சென்னை வரும்போது உற்சாகமாக உணர்கிறேன். இளம் திறனாளர்களை அதிகம் கொண்டுள்ளது சென்னை. எனக்கும் தமிழகத்திற்குமான உறவு மிகப்பழமையானது. நீங்கள் என்மீது பொழியும் அன்பும் மிகவும் பழமையானது. ஆனால் இங்கு சில ஆண்டுகளாகவே நான் தமிழகம் வரும்போது சிலருக்கு பயம் ஏற்படுகிறது. பாஜ.,.வுக்கு மக்கள் அளிக்கும் ஆதரவால் சிலருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது.
அக்கறையில்லை
மூன்றாவது முறை ஆட்சியின்போது, உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக்க வேண்டும். இந்தியாவின் வளர்ச்சியில் சென்னையின் பங்கு முக்கியமானது. சென்னைக்கு பல்லாயிரக்கணக்கான கோடியில் திட்டங்களை கொடுத்துள்ளோம். சென்னை மெட்ரோ, சென்னை விமான நிலையம் உள்ளிட்ட மிகப்பெரிய திட்டங்களை பா.ஜ., அரசு கொடுத்துள்ளது. தமிழகத்தை சிறப்பானதாக மாற்ற உறுதிப்பூண்டுள்ளோம்.
மிக்ஜாம் புயலின்போது மக்களுக்கு உதவ வேண்டிய தமிழக அரசு, எந்தவொரு பொருட்டாகவும் கருதவில்லை. மக்களின் சுக துக்கங்களில் மாநில அரசுக்கு அக்கறையில்லை. நீங்கள் துன்பத்தில் இருந்தபோது அவர்கள் உங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. சென்னை மக்களின் தேவைகளை திமுக அரசு கண்டுகொள்ளவில்லை. வெள்ள மேலாண்மையை செய்யாமல் ஊடக மேலாண்மையை செய்கின்றனர்.
திமுக.,வின் மனக்குறை
மத்தியில் உள்ள பாஜ அரசு, உங்கள் வேதனையை புரிந்து கொள்கிறது, உங்களுக்காக பணியாற்றுகிறது. ரேஷனில் இலவச அரசி, இலவச கொரோனா தடுப்பூசி போன்றவற்றை அளித்தோம். சிறு, குறு, நடுத்தர தொழில்துறையில் முன்னோடி மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சியை மனதில் கொண்டுள்ளது மத்திய பா.ஜ., அரசு. லட்சக்கணக்கான மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் நேரடியாக செல்வதே திமுக அரசின் மனக்குறை.
நீங்கள் தான் என் குடும்பம்!
எனக்கு குடும்பம் இல்லை என்று 'இண்டியா' கூட்டணியினர் கூறுகிறார்கள்.எனது 16 வயதில் தேசத்திற்காக நான் வீட்டைவிட்டு வெளியேறினேன்; நீங்கள் தான் என் குடும்பம். தேசம் ஒரே குரலில் சொல்கிறது 'நான் மோடி குடும்பம்' என்று.
குடும்ப ஆட்சியின் போது இந்தியாவில் 18 ஆயிரம் கிராமங்களில் மின்சார வசதி இல்லை.அவர்கள் குடும்பத்திற்காக அரசியல் செய்கிறார்கள்; நான் நாட்டு மக்களுக்காக அரசியல் செய்கிறேன்.திமுக.,வுக்கு குடும்பம்தான் முக்கியம்; ஆனால் பா.ஜ.,வுக்கு மக்கள் மீதே அக்கறை. லட்சக்கணக்கான கோடி ரூபாய் வளர்ச்சி திட்டங்களில் ஊழல் செய்ய முடியவில்லை என திமுக வருந்துகிறது. தமிழக மக்கள் ஏமாற்றப்படாமல் நான் தடுப்பேன். மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறது திமுக அரசு.
கொள்ளையடித்த பணம் வசூலிக்கப்படும்!
புயலின் போது சென்னை மக்கள் துயரங்களை அனுபவித்தபோது பாலும், தேனும் பாய்வதாக தி.மு.க., அரசு பேசியது.மானியங்கள் மக்களுக்கு நேரடியாகச் செல்வது தான் தி.மு.க.,வுக்கு வருத்தம்.தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ஒதுக்கும் பணத்தை கொள்ளையடிக்க விடமாட்டோம். தி.மு.க., கொள்ளையடித்த பணம் திரும்ப வசூலிக்கப்பட்டு, தமிழ்நாட்டு மக்களுக்காகவே செலவிடப்படும். தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு அளிக்கப்படும் பணத்தை கொள்ளையடிக்க விடமாட்டேன்.இது மோடி கியாரண்டி.
சூரிய மின் திட்டத்திற்கு ரூ. 75 ஆயிரம் கோடி
நான் நாட்டு மக்களை நினைத்தே ஆட்சி செய்கிறேன். ஆனால் குடும்ப கட்சிகள் தங்கள் குடும்பங்களை நினைத்து அரசியல் செய்கின்றன. நாட்டு மக்களின் நலனுக்காக என் குடும்பத்தைவிட்டு வெளியேறி பணியாற்றி வருகிறேன். நாடு முழுதுமே எனது குடும்பம் தான். தேசத்தின் இளைஞர்கள் என் குடும்ப மக்கள்.
சூரிய மின் சக்தி திட்டத்திற்கு ரூ. 75 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. வீடுகளில் சூரிய தகடு அமைத்து தரப்படும் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.
தமிழக எதிரிகள் மீது நடவடிக்கை!
தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் கட்சியின் ஆதரவில் போதைப்பொருள் தங்கு தடையின்றி விற்பனையாவது என் மனதை அரிக்கும் கவலையாக உள்ளது. மக்களும் கவலையில் உள்ளனர்; இது அபாயம்.நீங்கள் பா.ஜ.,வை பலப்படுத்தினால் தமிழ்நாட்டின் எதிரிகள் மீதான நடவடிக்கை விரைவுபடுத்தப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

