ADDED : ஜன 14, 2026 06:10 AM

சென்னை: ''தமிழகத்தில் பணியாற்றும், பகுதிநேர மகப்பேறு பணியாளர்களுக்கு, அவர்கள் கேட்டதை விட, கூடுதலாக ஊதிய உயர்வு வழங்கப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய, 831 செவிலியர்களுக்கு, பணி நிரந்தர ஆணையை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று வழங்கினார். அப்போது, அவர் பேசியதாவது:
அ.தி.மு.க., ஆட்சியில், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்களில், 1,600 பேர் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். ஆனால், நான்கரை ஆண்டு தி.மு.க., ஆட்சியில், 5,825 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளனர். மீதமுள்ள, 5,932 பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டியுள்ளது. மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வரும். அப்போது, அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்.
தற்போது, பணி நியமன ஆணை பெற்றவர்கள், பொங்கலுக்கு பின் நடக்கும் கலந்தாய்வின் போது, பணியாற்றும் இடங்களை தேர்வு செய்யலாம். இந்த விவகாரத்தில், இடைத்தரகர்களை நம்ப வேண்டாம்.
கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும், 1,325 பகுதிநேர மகப்பேறு பணியாளர்கள், மாதம், 1,500 ரூபாய் மட்டுமே சம்பளம் பெறுகின்றனர். அவர்கள் தங்களுக்கு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று, கோரிக்கை வைத்துள்ளனர். அவர்கள் கோரிய தொகையை விட கூடுதலாக, அவர்களுக்கான ஊதிய உயர்வு வழங்கப்படும். வரும், 19ம் தேதி அவர்களிடம் அறிவிக்கப்படும். கடந்த நான்கு ஆண்டுகளில், 37,603 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதில், 17,000 புதிய பணியிடங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

