ADDED : மார் 26, 2026 11:19 PM
சென்னை:அ.ம.மு.க. பொதுச்செயலர் தினகரன் மீதான இரண்டு வழக்குகளை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில், கடந்த 2018ல், தேவர் ஜெயந்தி விழாவின்போது, அப்போதைய முதல்வர் பழனிசாமியை வரவேற்று அ.தி.மு.க.,வினர் வைத்த பேனர்களை சேதப்படுத்தியதாக, தினகரன் உட்பட 50க்கும் மேற்பட்டோர் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, கமுதி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதேபோல், 2021 தேர்தல் பிரசாரத்தின் போது, முன்னாள் முதல்வர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் சண்முகம் ஆகியோரை, அவதுாறாக பேசியதாக, தினகரன் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தினகரன் தரப்பில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளில்,' இரு தரப்பு இடையே சமரசம் ஏற்பட்டுவிட்டது' என, கடந்த விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் மீண்டும் விசாரணை நடந்தபோது, புகார் அளித்தவர்கள் ஆஜராகி, சமரசம் ஏற்பட்டதை தெரிவித்தனர்.
அதை பதிவு செய்த நீதிபதி, தினகரன் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார். பேனர்கள் சேதப்படுத்தப்பட்ட வழக்கில் மட்டும், வழக்கு செலவு தொகையாக 50,000 ரூபாயை, தமிழக சட்டப் பணிகள் ஆணையக்குழுவில் செலுத்த, தினகரனுக்கு உத்தரவிட்டார்.
***
