கிளாம்பாக்கம் போல மாறியுள்ளது திருச்சி ஏர்போர்ட் புதிய முனையம்
கிளாம்பாக்கம் போல மாறியுள்ளது திருச்சி ஏர்போர்ட் புதிய முனையம்
ADDED : ஜூன் 13, 2024 05:48 PM
திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பயணியர் வசதிக்காக, 1,110 கோடி ரூபாய் மதிப்பில் புதிய முனையம் கட்டப்பட்டது. அதை சில மாதங்களுக்கு முன், பிரதமர் மோடி திறந்து வைத்தார். எனினும் பணிகள் நிறைவடையாததால், செயல்பாட்டுக்கு வராமல் இருந்தது. இந்நிலையில் கடந்த, 11ம் தேதி முதல், புதிய விமான நிலைய முனையம் பயணியர் பயன்பாட்டுக்கு வந்தது.
இந்நிலையில், புதிய முனையத்தில் இருந்து, முக்கிய சாலைக்கு வர, 1.5 கி.மீ., உள்ளதால், அதற்காக போக்குவரத்து வசதி சரி வர செய்யப்படவில்லை என்று, பயணியர் கூறுகின்றனர். வெளியிலிருந்து புதிய முனையத்திற்குள் வரும் ஆட்டோக்களுக்கு, 80; டாக்சிகளுக்கு, 150 ரூபாய் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இதுகுறித்து பயணியர் கூறியதாவது:
லக்கேஜ்களுடன், 1.5 கி.மீ., நடந்து செல்ல வேண்டியுள்ளது. ஆகையால், மெயின் ரோட்டில் இருந்து புதிய முனையத்துக்கு, போதிய பஸ் வசதி செய்ய வேண்டும். அதேபோல, விமான நிலையப்பகுதியில் ஆட்டோ கட்டணத்தையும் முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட்டிலும் நீண்ட துாரம் நடந்து செல்ல வேண்டிய பிரச்னை உள்ளது. அதே போல தான், திருச்சி விமான நிலைய புதிய முனையத்துக்கும் உள்ளது.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'விமான நிலையத்துக்கு பஸ் வசதி ஏற்படுத்தித் தர மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம். விரைவில் பஸ் வசதி கிடைக்கும்' என்றனர்.

