ADDED : ஆக 29, 2025 07:33 AM

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஆகஸ்ட் 28) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலருக்கு தண்டனைகளையும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:
ஆசிரியர் மீது 'போக்சோ'
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த வாசுதேவனுாரைச் சேர்ந்தவர் சண்முகம். பாக்கம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் பாட ஆசிரியராக பணி புரிந்து வருகிறார்.
இவர் கடந்த 21ம் தேதி பள்ளி மாணவி ஒருவரை பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இதுகுறித்த புகாரின்பேரில் சண்முகம் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
நீலகிரி மாவட்டம், கூடலுார் அருகே உள்ள பகுதியில் வசிக்கும் தம்பதியின், 16 வயது சிறுமிக்கு, 30 வய தான உறவினர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
வேறொரு சிகிச்சைக்காக தம்பதியினர் மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி, ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
பெற்றோர் புகாரில், கூடலுார் போலீசார், விசாரணை மேற்கொண்டு போக்சோவில், 2020 ஆக., 26ல் சிறுமியின் உறவினரை கைது செய்தனர். ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்த வழக்கில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், உறவினருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
தொழிலாளி கைது
தஞ்சாவூர், ஆடக்காரத் தெருவை சேர்ந்தவர் சவரிமுத்து, 50; தனியார் சிலிண்டர் கம்பெனியில், சிலிண்டர் சப்ளை செய்யும் வேலை செய்து வந்தார். ஆக., 26ல் கீழவாசல் பகுதியில், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில், 13 வயது சிறுவனை தாக்கிபாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் சிறுவன், பெற்றோரிடம், கூறி அழுதுள்ளார். தஞ்சாவூர் போலீசார், சவரிமுத்துவை, நேற்று, போக்சோவில் கைது செய்தனர்.