பாரதத்தில் மதம் கிடையாது தர்மத்தால் உருவானது அது: கவர்னர் ரவி பேச்சு
பாரதத்தில் மதம் கிடையாது தர்மத்தால் உருவானது அது: கவர்னர் ரவி பேச்சு
ADDED : நவ 16, 2024 11:40 PM

சென்னை: ''பாரதத்தில் மதம் கிடையாது; பாரதம் தர்மத்தால் உருவானது,'' என, தமிழக கவர்னர் ரவி பேசினார்.
ஒப்பிட்டு கவிதை நோக்கில் ஆய்வு செய்யும் இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கம், சென்னை கவர்னர் மாளிகையில் நேற்று துவங்கியது.
இதில், திருவள்ளுவர் - கபிர்தாஸ் - வேமனா ஆகிய மூவரின் மொழியியல் மற்றும் இலக்கிய திறன் குறித்து, அறிஞர்கள் பலரும் விரிவாக பேசினர். கவர்னர் ரவி பேசியதாவது:
நாட்டின் வெவ்வேறு இடத்தில் இவர்கள் பிறந்தாலும், வேற்றுமையில் ஒற்றுமையை வலியுறுத்தி உள்ளனர். இந்திய இலக்கியங்களை எந்த மொழியில் படித்தாலும், சில ஒற்றுமைகள் இருக்கும். ஒற்றுமையை மட்டுமே மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதை பார்க்கலாம். எப்படி ஒற்றுமையோடு வாழ முடியும் என்பது கோடிட்டு காட்டப்பட்டிருக்கும்.
பாரதம் என்பது இந்தியாவை விட வேறுபட்டது. அது அரசியல் நிலம் மட்டுமல்ல, மக்களால் நிறைந்தது. ஐரோப்பியர்கள் தான் இந்தியா என்று அழைத்தனர். பாரதம் என்பது பழையது, மிக பெரியது.
ஐரோப்பியர்கள் வருகைக்கு முன் வேறு விதமாக இருந்தது. பாரதம் என்பது, 'ராஷ்ட்' என்று கூறப்படுகிறது. 'ரிக்' வேதத்தில் பாரதம் எப்படி உருவானது என, கூறப்பட்டுள்ளது.
ஆத்ம ஞானிகள் பலர் இங்கு இருந்தனர். ரிஷிகள் மற்றும் யோகிகள் என அனைவரும் ஒற்றுமையை பற்றி பேசியுள்ளனர். அதில், மனித ஒற்றுமை மட்டும் அடங்கவில்லை. அனைத்து உயிர்களும் ஒற்றுமையாக இருப்பதை வலியுறுத்தினர்.
பாரதத்தில் மதம் கிடையாது; மதத்தால் உருவானது அல்ல. பாரதம் தர்மத்தால் உருவானது. பாரதம் என்பது இந்தியா கிடையாது; பாரதம் என்பது தார்மீக நாடு, பாரதம் பரந்துபட்டது.
காலனிய மனநிலையில் பலரும் இருக்கிறோம். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில், 'பாரத்' என்று உள்ளது. எந்த மொழி, எந்த ஜாதி, எந்த இனமும் பாரதத்திற்கு கிடையாது. பாரதம் என்றால் என்னவென்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் விளக்கவில்லை.
நம் குழந்தைகளுக்கு பாரதத்தை பற்றி விளக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. பாரதத்தில் பிரிவினை உருவாக்க, நல்லிணக்கத்தை கெடுக்க, குறுகிய சுய லாபத்திற்காக, தற்போது ஜாதி, மதம், மொழி என பிளவுபடுத்த, பல கருத்துக்கள் பரவுகின்றன. ஜாதி, மதம், மொழி என்று பிரித்தால், இந்த நாடு இருக்காது.
கடந்த, 10 ஆண்டுகளில் நாம் பாரதத்தை மீட்டு வருகிறோம். பாரதம் என்றால் என்ன என்று அறிந்த ஒரு தேசிய தலைமை வாயிலாக, நாம் இதை செய்து வருகிறோம். 10 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவை, யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இந்தியா இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி வந்தனர். ஆனால், இன்று பாரதம் பேசினால் உலகம் கவனமாக கேட்கிறது. உலகின் எந்த முடிவுகளும், பாரதம் இல்லாமல் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.

