சதுப்பு நிலங்களை அளவிடும் பணி நிறைவு; தமிழக அரசு தகவல்
சதுப்பு நிலங்களை அளவிடும் பணி நிறைவு; தமிழக அரசு தகவல்
ADDED : டிச 12, 2025 10:35 AM

சென்னை: மாநிலம் முழுதும் உள்ள சதுப்பு நிலங்களை, செயற்கைக்கோள் உதவியுடன் துல்லியமாக அளவிடும் பணிகள் நிறைவு பெற்று விட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.
'ராம்சார்' தலமாக அங்கீகரிக்கப்பட்ட, சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், விதிகளை மீறி பன்னடுக்கு குடியிருப்புகள் கட்ட, 'பிரிகேட்' என்ற தனியார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதை ரத்து செய்ய கோரி, அ.தி.மு.க., சென்னை புறநகர் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலர் பிரெஷ்நேவ் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 'உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, சதுப்பு நிலத்தின் எல்லையை துல்லியமாக, செயற்கைக்கோள் உதவியுடன் அளவிடும் பணியை விரைவுபடுத்த வேண்டும்.
'அதுவரை, சம்பந்தப்பட்ட சதுப்பு நில பகுதியில், தனியார் கட்டுமான நிறுவனம் எந்த பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது' என, இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், பள்ளிக்கரணை உள்ளிட்ட சதுப்பு நிலங்களை, செயற்கைக்கோள் உதவியுடன் துல்லியமாக அளவீடு செய்யும் பணிகள் நிறைவு பெற்று விட்டன.
''இது சம்பந்தமான அறிக்கை, உறுதி செய்வதற்காக, மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அவர்களின் அறிக்கையை பெற்ற பின், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்,'' என்றார்.
இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜனவரி 4வது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

