அரசியலமைப்பு சட்டத்தை சுப்ரீம் கோர்ட் பாதுகாக்கும்: வக்ப் சட்ட திருத்தம் குறித்து தீர்ப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு
அரசியலமைப்பு சட்டத்தை சுப்ரீம் கோர்ட் பாதுகாக்கும்: வக்ப் சட்ட திருத்தம் குறித்து தீர்ப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு
ADDED : செப் 15, 2025 03:51 PM

சென்னை: வக்ப் சட்டத்திருத்தம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பினை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
அவரது அறிக்கை: திமுகவும் மற்ற மனுதாரர்களும் வக்ப் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில், மத்திய பாஜ அரசு கொண்டு வந்துள்ள முக்கியத் திருத்தங்களுக்குத் தடை விதித்து சுப்ரீம்கோர்ட் இன்று உத்தரவிட்டு உள்ளது.
வக்ப்க்குச் சொத்தை அளிக்க, 5 ஆண்டு இஸ்லாத்தைக் கட்டாயமாக நடைமுறையில் கடைப்பிடித்திருக்க வேண்டும் எனும் விதிக்குத் தடை. வக்ப் நிலத்தை அரசு நிலம் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தாலே, உரிய அதிகாரி அறிக்கை அளிக்கும்வரை அல்லது அரசு முடிவெடுக்கும் வரை அச்சொத்தைப் பறிக்கும் அதிகாரத்துக்குத் தடை.
'வக்ப் பயனர்' என்பதை நீக்கும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கான அதிகாரத்துக்குத் தடை (நீண்டகால மதப் பயன்பாட்டின் அடிப்படையில் வக்ப் சொத்துகளாகக் கருதப்படும் சொத்து). மத்திய வக்ப் வாரியத்தில் நான்குக்கும் மேற்பட்ட முஸ்லீம் அல்லாதோரை சேர்ப்பது, மாநில வக்ப் வாரியங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட முஸ்லீம் அல்லாதோரைச் சேர்ப்பதற்குத் தடை. இதனால், இந்த வாரியங்களில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருப்பது உறுதிசெய்யப்படும்.
பாஜ அரசு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக, சட்டவிரோதமாகச் செய்துள்ள திருத்தங்களை நீக்குவதை நோக்கிய முக்கிய நகர்வாக இன்றைய நீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளது.இந்த சட்டத்திருத்த முன்வரைவு பார்லிமென்டில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே, திமுக இதனைத் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள பலரோடு சேர்ந்து வெற்றியும் கண்டுள்ளது.
திமுக தலைமையிலான தமிழக அரசும் மத்திய அரசு வக்ப் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்திச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் பாஜ வின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், இன்றைய உத்தரவு இஸ்லாமியர்களின் மத உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் சுப்ரீம் கோர்ட் பாதுகாக்கும் என மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.