'டபுள் டெக்கர்' பஸ்சில் பயணம் மாணவ - மாணவியர் உற்சாகம்
'டபுள் டெக்கர்' பஸ்சில் பயணம் மாணவ - மாணவியர் உற்சாகம்
ADDED : ஜன 15, 2026 02:10 AM

சென்னை: புதிதாக துவக்கப் பட்டுள்ள 'டபுள் டெக்கர்' பேருந்தில் பயணித்து, மாணவ - மாணவியர் நேற்று உற்சாகம் அடைந்தனர்.
சென்னையில், 1.89 கோடி ரூபாயில், இரண்டு 'டபுள் டெக்கர்' பேருந்து சேவையை, முதல்வர் ஸ்டாலின், கடந்த 12ம் தேதி துவக்கி வைத்தார்.
இந்த பேருந்துகள் வாயிலாக, சென்னை நகரில் வரலாற்று கலாசாரம் மற்றும் கட்டடக்கலை முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக, கெல்லீஸ், கொசப்பேட்டை, ராயபுரம் அரசு காப்பகங்களில் உள்ள, 54 மாணவ - மாணவியர், டபுள் டெக்கர் பேருந்துகளில் நேற்று குதுாகலமாக பயணித்தனர்.
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, இன்று முதல் 18ம் தேதி வரை, தீவுத்திடலில் நடக்கும் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை பார்வையிட வரும் பள்ளி மாணவ - மாணவியரை, இந்த பேருந்தில் சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பயன்பெறும் வகையில், சுற்றுலா இணையதளத்தில் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட உள்ளது. இரண்டு வழித்தடங்களில், இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக தலைமை அலுவலகத்தில் துவங்கி, அண்ணா சாலை, உயர் நீதிமன்றம், துறைமுகம், மெரினா கடற்கரை உட்பட, பல்வேறு இடங்களை காணும் வகையில் முதல் வழித்தடம் அமையும்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைமை அலுவலகத்தில் இருந்து, முட்டுக்காடு வழியாக, மாமல்லபுரம் சென்று வரும் வகையில் இரண்டாவது வழித்தடம் அமையும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

