பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழா; சிறப்பு நாணயம் வெளியிட்டார் பிரதமர் மோடி
பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழா; சிறப்பு நாணயம் வெளியிட்டார் பிரதமர் மோடி
UPDATED : நவ 19, 2025 09:53 PM
ADDED : நவ 19, 2025 10:05 AM
முழு விபரம்

புட்டபர்த்தி:
புட்டபர்த்தி வந்துள்ள பிரதமர் மோடி, ஸ்ரீ சத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழாவில் பங்கேற்றுள்ளார். முன்னதாக, பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் மகா சமாதியில் மரியாதை செய்து, தியானத்தில் ஈடுபட்டார். 100 ரூபாய் சிறப்பு நாணயத்தையும் வெளியிட்டார்.
ஸ்ரீ
சத்யசாய் பாபா, ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் 1926, நவ., 23ல்
பிறந்தார். ஆன்மிக பணிகளுடன் ஸ்ரீசத்யசாய் அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்கு
கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை இலவசமாக வழங்கத் துவங்கினார்.
புட்டபர்த்தியில் இவர் ஏற்படுத்திய ஸ்ரீ சத்யசாய் அறக்கட்டளை சார்பில்
பிரமாண்ட இலவச மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் இன்றும் மிகச் சிறப்பாக
செயல்படுகின்றன.
போதனைகள்
இந்தியா மட்டுமின்றி உலகின்
பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் இவரது போதனைகள் மற்றும் சேவையால்
ஈர்க்கப்பட்டு பக்தர்களாகி வருகின்றனர். புட்டபர்த்தியில் ஸ்ரீசத்ய சாய்
பாபாவின் நுாற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் கடந்த நவ., 13ம் தேதி
தொடங்கியது. வரும் நவ., 24 வரை கோலாகலமாக நடக்கிறது. உலகின் 140 நாடுகளை
சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.
மகா சமாதியில் மரியாதை
இவ்விழாவில்
பங்கேற்க, பிரதமர் மோடி இன்று (நவ.,19) காலை புட்டபர்த்தி வந்தார். பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பிரசாந்தி நிலையம் சென்று மகா சமாதியில் மரியாதை செய்தார். அங்கு வேத பண்டிதர்கள் மந்திரங்களை முழங்க, பிரதமர் மோடி சிறிது நேரம் தியானம் செய்தார். தொடர்ந்து, கோசாலையில் இருந்த பசுக்களுக்கு தீவனம் வழங்கினார்.
தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பிரபல பாடகி சுதா ரகுநாதன் குழுவினரின் இசை நிகழ்ச்சி, இசைக்கலைஞர் சிவமணியின் டிரம்ஸ் இசை நிகழ்ச்சி, நாட்டியக்கலைஞர்களின் அசத்தல் நடனங்களை பிரதமர் மோடி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கண்டு ரசித்தனர்.
விழாவுக்கு ஸ்ரீ சத்யசாய் மத்திய அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ரத்னாகர் தலைமை வகித்தார். நடிகை ஐஸ்வர்யா ராய், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் சத்ய சாய்பாபாவின் போதனைகள், சேவையின் மகிமைகளை பற்றி பேசினர்.
தபால் தலை
தொடர்ந்து பகவான்
ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் வாழ்க்கை, போதனைகள் மற்றும் பாரம்பரியத்தை
கவுரவிக்கும் விதமாக 100 ரூபாய் நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் மோடி
வெளியிட்டார். தொடர்ந்து சத்ய சாய்பாபாவின் பெருமைகள் பற்றியும், அவரது சேவை குறித்தும் பிரதமர் மோடி உரையாற்றினார்.

