ADDED : நவ 15, 2024 11:52 PM
சென்னை:தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், விரிவுரையாளர்கள் பற்றாக்குறையால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஆறு பாலிடெக்னிக் கல்லுாரிகள் உட்பட மாநிலம் முழுதும் 55 பாலிடெக்னிக் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன.
இந்த கல்லுாரிகளில் 2,051 விரிவுரையாளர்கள் பணிபுரிய வேண்டிய நிலையில், தற்போது 1,476 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர்.
கடந்த ஏழாண்டுகளாக விரிவுரையாளர் பணிஇடங்கள் நிரப்பப்படவில்லை. 'எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன்' துறையில், 100 பேர் உட்பட, 575 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
அரசு, தொழிற்கல்வியை ஊக்குவிப்பதாக கூறி வரும் நிலையில், அரசு பாலிடெக்னிக் கல்லுாரியிலேயே, முக்கிய பாடங்களுக்கு விரிவுரையாளர்கள் இல்லாத நிலை உள்ளது.
இதனால், அந்த பாடப்பிரிவை தேர்வு செய்த மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, தொழில்நுட்ப கல்வி இயக்ககம், காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில், 'விரைவில் தகுதியான விரிவுரையாளர்களை தேர்வு செய்ய வேண்டும்' என, மாணவர்கள், பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.

