ரூ.2,438 கோடி மோசடி விவகாரம்: ஆருத்ரா நிர்வாகிகள் வீடுகளில் 'ரெய்டு'
ரூ.2,438 கோடி மோசடி விவகாரம்: ஆருத்ரா நிர்வாகிகள் வீடுகளில் 'ரெய்டு'
ADDED : நவ 27, 2025 12:43 AM

சென்னை: 'ஆருத்ரா கோல்டு டிரேடிங்' நிதி நிறுவன மோசடி தொடர்பாக, சென்னை, வேலுார், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில், 15 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை அமைந்தகரை யில், ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. அதன் இயக்குநர்கள் ராஜசேகர், அவரது மனைவி உஷா உள்ளிட்டோர், 2020 - 2022 வரை, முதலீட்டாளர்கள் ஒரு லட்சம் பேருக்கு, அதிக வட்டி தருவதாக, 2,438 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, ராஜசேகர் உள்ளிட்ட, 24 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இவ்வழக்கில், ராஜசேகர் கூட்டாளிகள், 13 பேரை கைது செய்தனர். மனைவி யுடன் ராஜசேகர் துபாய் தப் பினார். ராஜசேகர் மட்டும் துபாய் போலீசாரால் கைது செய்யப்பட்டு, அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். உஷா, வெளி நாடுகளில் தலைமறைவாக இருந்து வருகிறார்.
இதற்கிடையே, ராஜசேகர் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் மீது, தொடர் நடவடிக்கை எடுக்காமல் பார்த்து கொள்வதாக கூறி, அரசியல் கட்சியினர் மற்றும் சினிமா பிரபலங்கள் பணம் வசூலித்து இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், ஆருத்ரா நிறுவனம் மற்றும் ராஜசேகர், உஷா உள்ளிட்டோர், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகளும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அவர்கள், சென்னை, காஞ்சிபுரம், வேலுார் மாவட்டங்களில், ஆருத்ரா நிறுவன நிர்வாகிகள், அலுவலக ஊழியர்கள், பங்குதாரர்கள் வீடு என, 15 இடங்களில், நேற்று சோதனை நடத்தினர்.
சென்னையில் முகப்பேர் கிழக்கு, 29வது தெருவில் உள்ள முக்கிய நிர்வாகி வீட்டில் சோதனை நடத்தி, 'டிஜிட்டல்' ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

